அந்தக் குறுகிய தெரு என் நினைவில் இருக்கிறது. ட்ராம்களும் இதர வாகனங்களும் சதா நகர்ந்துகொண்டிருக்கிற விசாலமான ராஷ் பிஹாரி அவனயுவில் சென்று சேர்கிற தெருவினூடே நடந்து போகும்போது உடனிருந்த பெங்காலி நண்பர் இருள் நிறைந்த பொந்து போன்ற ஓரிடத்தை சுட்டிக்காண்பித்து சொன்னார்: ரித்விக் தாவை பலபோதும் இங்கே பார்த்ததுண்டு.
அங்கே பார்த்தபோது நாட்டுச்சாராயம் அடித்துவிட்டு நின்றுகொண்டிருக்கும் ரித்விக் கட்டக்கை என்னால் கற்பனை செய்ய முடிந்தது. கருப்பும் வெளுப்பும் தீவிரமாக கலந்த ஒரு லோ ஆங்கிள் ஷாட். பிறகு நோஸ்டால்ஜியா கலந்த குரலில் நண்பர் பிரியமான ரித்விக் தாவின் இறுதி நாட்களைப் பற்றி சொல்வதைக் கேட்டபடி ராஷ் பிஹாரி அவனயுவை நோக்கி நடக்கையில் என் முன்னால் கசங்கிய ஆடை அணிந்த அவலமான ஒரு மெலிந்த உருவம் தடுமாறி நடந்து சென்றது. எங்கிருந்தோ ரபீந்திர சங்கீதம் எழுந்தது. அதனிடையே அழுதபடி ஒரு பெண் உரத்து சொன்னாள்: தாதா, அமி பாஞ்ச்போ.
'மேகே தகா தாரா' பார்த்தவர்களுக்கு தெரியும். அது 'நீதா' தானென்று. ரித்விக் கட்டக் திரைப்படங்களில் மிக முக்கியமானது 'மேகே தகா தாரா'. வாழ்க்கையைப் போலவே திரைப்படக்கலையிலும் கட்டக்கின் வித்யாசமான அணுகுமுறையை இந்த படைப்பு நிரூபிக்கிறது. பெங்காலி மித்கள் மற்றும் பெங்காலி இசையின் செறிவை உள்வாங்குவது மட்டுமல்லாமல் திரைப்பட ஆசான்களான பெல்லினி மற்றும் லூயி பனுவலின் மகத்தான பாரம்பர்யத்தை உள்வாங்கவும் கட்டக்கால் முடிந்திருக்கிறது என்பதை 'மேகே தகா தாரா' மூலமாக நம்மால் கண்டறிய முடியும்.
சரளமான ஒரு கதைசொல்லல் மூலம் வாழ்க்கை யதார்த்தங்களின் ஆழங்களுக்கும் திரைப்படக்கலையின் மிகச்செறிவான ஒரு அனுபவத்துக்கும் கட்டக் பார்வையாளர்களை இட்டுச்செல்கிறார். கதை என்பது ஒரு வெளிப்புற அமைப்பு மட்டுமே. அதனாலேயே 'மேகே தகா தாரா' பார்வையாளனிடமிருந்து மிக நுணுக்கமான அணுகலைக் கோருகிறது. குறியீடுகளும் மாதிரிகளும் கலந்த காட்சிகளை ஒலிகளோடும் இசையோடும் ஒரு இதிகாசக்காரனின் மனம்கொண்டு இயைக்கிறார் கட்டக்.
'மேகே தகா தாரா' வின் நாயகியான நீதா (சுப்ரியா சௌத்ரி) குழந்தை பருவத்தை கழித்த குன்றுகளுக்கு திரும்பிப்போக விரும்புகிறாள். குடும்பத்தினரின் குரூரமான வஞ்சனைகளுக்கு இரையான அவள் இறுதியில் ஒரு க்ஷய ரோகியாக குன்றுகளின் மேலுள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து சேர்கிறாள். ஒருபோதும் எதிர்வினை செய்யாததுதான் தன் தவறு என்று அதற்குள் உணர்ந்துவிட்டிருந்தாள். தனக்கு நிச்சயிக்கப்பட்ட வரனை தங்கை சொந்தமாக்கியபோதும் அதற்கு அம்மாவின் பின்துணை இருக்கிறது என்பது தெரியவந்தபோதும் அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தான் செய்த பாவம் அதுதான் என்று உணர்ந்துகொண்டபோதோ ஏறக்குறைய பயணத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டாள்.
இங்கே கட்டக் பார்வையாளரை என்றென்றும் நிலைகுலையச் செய்யும் ஒரு தருணத்தை படைக்கிறார். மருத்துவமனைக்கு வெளியே நீதாவும் சகோதரனும். பின்னணியில் குன்றுகள். இறுதி காட்சி. மரணத்தின் இருப்பை மிக அருகில் உணர்ந்துவிட்டாள் நீதா. கையறு நிலையில் அடக்கமாட்டாமல் அழுகிறாள் அவள். சகோதரனிடம் ஆழமான துயரத்துடன் கூறுகிறாள்: தாதா, அமி பாஞ்ச்போ. (நான் வாழ்வேன்) அந்த அழுகை குன்றுகள் எங்கும் முழங்குவதாக கேமராவின் வேகமான சலனத்தின் மூலம் கட்டக் பதிவு செய்கிறார்.
வாழ்வதற்கான அடக்கமுடியாத ஆவலைத்தான் கண்ணீர் கலந்த வார்த்தைகள் மூலமாக நீதா வெளிப்படுத்துகிறாள். அவளிலிருந்து வெளிப்பட்ட அந்த வார்த்தைகள் குன்றுகளை மட்டுமல்ல, அவளுடைய வாழ்க்கை தருணங்களை பங்கிட்ட, அதே போன்ற கருணையில்லாத வஞ்சனைகளுக்கிரையாகி தகர்ந்துபோன அநேக அநேகம் பேரை ஸ்பர்சிக்கிறது. அந்த வார்த்தைகளில் வாழ்வதற்கான உரிமையின் உறுதியும் தெரிகிறது. வாழ்க்கைக்கு எதிரான இருண்ட சக்திகளுக்கு நேரான தீவிரமான எதிர்ப்பும் தெரிகிறது.
தமிழில் ஸ்ரீபதி பத்மநாபா