
தமிழ் படைப்புலகில் நிலவும் வறட்சியான விமர்சன சூழலைக் கவனப்படுத்தியும், கவனப்படுத்தாத படைப்புகளின் மீதான நேர்மையான விமர்சனங்களின் அவசியங்கருதியும் ‘சொற்கப்பல்‘ விமர்சன தளம் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
‘சொற்கப்பல்‘ அமைப்பின் அறிமுக விழா மற்றும் ‘விளக்கு’ விருது பெற்ற கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்குப் பாராட்டு விழா சென்னையில் மார்ச் 6 அன்று நடைபெற்றது. விருப்பு வெறுப்பற்ற விமர்சனங்களின் அவசியத்தையும், சொற்கப்பல் அறிமுகத்தையும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் படைப்புகளின் மீதான விமர்சன நிகழ்வு ஒருங்கிணைக்கப்படும் என்பதையும் கூறி, பொன்.வாசுதேவன் வரவேற்புரை வழங்கினார். ‘சொற்கப்பல்’ செயல்பாடுகள் பற்றியும், விமர்சனங்களின் முக்கியத்துவம் குறித்தும் அஜயன்பாலா அறிமுகவுரையாகப் பேசினார். ‘விளக்கு’ விருது பெற்ற கவிஞர் விக்ரமாதித்யன் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.
வாழ்த்துரை வழங்கிய கவிஞர் விக்ரமாதித்யன் பேசுகையில்,
"ஆதியில் ஓசையிலிருந்து பிறந்த மொழியானது பாடல்களாகி பின் உரைநடையாகியது. பின்னர் வசன கவிதை, நவீன கவிதை என அதன் நீட்சி ஏற்பட்டது. விமர்சனம் என்பது தற்போதைய சூழலில் போலியானதாக, தனிப்பட்ட விருப்புகள் சார்ந்தே இருக்கிறது. திரும்பத் திரும்ப குறிப்பிட்ட படைப்பாளிகளை முன்னிறுத்திப்பேசி தமிழில் வேறு படைப்பாளிகளே இல்லை என்பது போன்ற போலியான தோற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தியதில் இலக்கிய இதழ்களின் பங்கு அதிகம். காலச்சுவடு, உயிர்மை போன்ற பத்திரிகைகள் தமிழ் இலக்கியத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதன் போக்குகளை நிர்ணயம் செய்கிற அதிகாரத்துடன் செயல்படுகின்றன. தி.மு.க. அல்லது அ.தி.மு.க. என அரசியலில் கட்சிகள் இருப்பது போலவே, இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் ஒன்று. காலச்சுவடு கட்சியைச் சேர்ந்தவராகவோ அல்லது உயிர்மையைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள். படைப்பாளிகளை சார்பு நிலையில் செயல்படச் செய்யும் இப்படியான இலக்கியப் போக்கு தொடர்வதை நாம் புறக்கணிக்க வேண்டும்" என்று பேசினார்.
தொடர்ச்சியாக, அமிர்தம் சூர்யா எழுதிய ‘கடவுளைக் கண்டுபிடிப்பவன்’ சிறுகதைத் தொகுதி மீதான வே.எழிலரசு அவர்களின் விமர்சனம் மற்றும் சந்திரா எழுதிய ‘காட்டின் பெருங்கனவு’ சிறுகதைத் தொகுதி பற்றிய அசதா மற்றும் காலபைரவன் ஆகியோரின் விமர்சன நிகழ்வும் நடைபெற்றது. விமர்சனத்தையொட்டி கேள்விகளும், உரையாடலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் வேடியப்பன் நன்றியுரை வழங்கினார்.
அஜயன்பாலா, பொன்.வாசுதேவன் (அகநாழிகை), முகுந்த் (தடாகம்.காம்), வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்) ஆகியோர் சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தனர்.