மாற்றம்
சிறு வயதிலிருந்தே முல்லா நஸ்ருத்தீன் ‘ஏட்டிக்குப் போட்டி' என்ற பட்டப் பெயருடன் அறிமுகமாயிருந்தார்.
பெற்றோர்களும் முல்லாவின் குணத்துக்கு பழகிப் போயிருந்தனர். அதனால் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதற்கு எதிரானதை முல்லாவிடம் செய்யச் சொல்வார்கள்.
முல்லாவின் பதினான்காவது வயதில், அவரும் அவர் தகப்பனாரும் கழுதை மேல் மாவுப் பொதியை ஏற்றிக்கொண்டு சந்தைக்குச் சென்றனர்.
அதிகாலை நேரத்தில் ஒரு கயிற்றுப் பாலத்தை கடக்கும் போது பொதி சரிவது போல் தோன்றியது.
முல்லாவின் தகப்பனார், "முல்லா இடதுபுறமாய் உள்ள பொதியை சீக்கிரமாய் தூக்கி விடு. இல்லாவிட்டால் சரக்கு எல்லாம் நாசமாய் போய் விடும்' என்று சத்தம் போட்டார்.
நஸ்ருத்தீனும் தந்தை சொன்னபடியே இடது பக்க பொதியை தூக்கி நிறுத்தினார். அதன் விளைவாக பொதி மூட்டைகள் எல்லாம் நிலை குலைந்து கீழே ஆற்றில் விழுந்து விட்டன.
"முட்டாளே! நீ எப்போதும் ஏட்டிக்குப் போட்டிதானே பண்ணுவாய். நான் இடது என்றால், நீ வலது பக்கம் என்பதுகூட தெரியாதா?' என்று தகப்பனார் சத்தம் போட்டார்.
"ஆமாம். தந்தையே! எனக்கு இன்று பிறந்த நாள். வயது பதினான்கு. இன்று அதிகாலையிலிருந்தே பகுத்தறிவுள்ள இளைஞனாக நான் கருதப்படக்கூடியவன்.
ஆகையால் நீங்கள் சொன்னபடி உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிந்தேன்."என்றார் முல்லா.
ஓவியம் : பாபுஜி