ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே. 5

ஒரு பறவை.

அது கிழக்கே இருந்து மேற்காமல் பறந்து கொண்டிருக்கிறது.

அந்தப் பறவை ரொம்பத் தூரத்தில் இருந்து வந்துகொண்டிருக்கிறது.

அது இன்னும் ரொம்பத்தூரம் போக வேண்டும்.

அந்தப் பறவையின் கூடு மேற்கே ரொம்பத் தூரத்தில் இருக்கிறது. அங்கே அது உயரமாக ஒரு கடம்ப மரத்தில் கூடு கட்டியிருக்கிறது. அந்தக் கூட்டில் அந்தப் பறவை

குஞ்சு பொரித்திருக்கிறது.

அந்தப் பறவை தன்குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதற்காக அது தன் வாயில் நிறையா இரை எடுத்துக்கொண்டு போகிறது.

பொழுது மறைந்துவிட்டது.

நேரம் இருட்டிக்கொண்டு வருகிறது.

இந்தச் சிறிய பறவை இந்தப் பெரிய வானத்தில் வேகமாகப் பறந்து போய்க் கொண்டிருக்கிறது.

பாவம்.

அது இன்னும் ரொம்பத்தூரம் போக வேண்டும்.

-தாமோதரனார்
குறுந்தொகை 92