குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயல் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. 5

தொண்டி என்பது சேர மன்னனின் தலைநகரம். சேரமன்னனின் ஒரு துறைமுகப் பட்டணம் இந்தத் தொண்டி. இந்தத் தொண்டிப் பட்டணம் மேற்குக் கடல்கரையில் இருக்கிறது.

இந்த மேற்குக் கடலில் ருசியான அயிரைமீன்கள் கிடைக்கும்.

ஒரு பெரிய கடல் கிழக்குத் திசையிலும் இருக்கிறது. இந்தக் கடல்கரையில் ஒரு நாரை நின்றுகொண்டிருக்கிறது. இந்த நாரைக்கு வயதாகிவிட்டது. இந்த நாரைக்கு இரண்டு சிறகுகளும் இல்லை.

சிறகுகளை இழந்த இந்த நாரைக்கு இந்தப் பெரிய கடலில் மீன்கள் கிடைக்கவில்லை. மீன்கள் கிடைக்காத இந்த நாரை மேற்குக் கடலில் கிடைக்கிற ருசியான மீன்களை நினைத்து உருகிக்கொண்டிருக்கிறது.

-பரணர்
குறுந்தொகை 128