கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்
குவளைத் தண்தழை யிவளீண்டு வருந்த 5
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.

ஒரு பெரிய பலாத் தோட்டம்.

பலா மரங்களின் காய்கள் பெருசுபெருசாக் காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்கிறது. பழுத்த பழங்கள் மணம் வீசிக்கொண்டிருக்கின்றன.

ஒரு காவல்காரன் அந்தப் பெரிய பலாத் தோட்டத்தைக் காவல்காத்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு பகல்.

ஒரு பலாமரத்தடியில் அந்தக் காவல்காரன் கண்களை மூடிப்படுத்திருக்கிறான். அவன் அசந்து உறங்கிக்கொண்டிருக்கிறான்.

ஒரு பெரிய ஆண்குரங்கு, காவல்காரன் ஒரு மரத்தடியில் படுத்திருப்பதைப் பார்க்கிறது. காவல்காரன் நன்றாக உறங்குகிறான் என்பதையும் அது தெரிந்து கொள்கிறது.

அந்தப் பெரிய ஆண்டுகளுக்கு ஒரு பெரிய பலா மரத்தில் உட்கார்ந்திருக்கிறது. அந்த ஆண்குரங்கு அந்தப் பெரிய பலாமரத்தில் பழுத்துத் தொங்குகிற ஒரு பெரிய பலாப்பழத்தில் கையைவிட்டுக் குடைந்து குடைந்து சுளைகளை அள்ளி அள்ளி விழுங்கிக் கொண்டிருக்கிறது.

காவல்காரனுக்கு முழிப்புத் தட்டுகிறது.

அவன் எழுந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கிறான்.

ஒரு பெரிய ஆண்குரங்கு ஒருபெரிய பலாப்பழத்தைத் தின்று கொண்டிருக்கிறது.

காவல்காரன் யோசனை செய்கிறான்.

பலாப்பழத்தைத்தின்று மகசூலை நாசம்பண்ணுகிற இந்தப் பெரிய ஆண்குரங்கைப் பிடிக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்கிறான்.

மறுநாள், அந்தக் காவல்காரன் அந்தப் பெரிய ஆண்குரங்கைப் பிடிப்பதற்கு அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாப் பலாமரங்களிலும் வலைகளைக் கெட்டிக் கொண்டிருக்கிறான்.

-காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்
குறுந்தொகை 342