அயோத்தி நில விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தம் குழுவுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. மதச்சார்பின்மை மற்றும் தனிப்பட்ட முறையில் இயல்பான உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு சர்ச்சையில் இரண்டு மதங்களுக்கும் சாதகமான முடிவினை அறிவிக்குமா? மத்தியஸ்தம்.

அயோத்தி-பாபர் மசூதி

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்டப்பட்டு இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. இதனால் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் மதக் கலவரம் ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

ராமஜென்ம பூமி – பாபர் மசூதி பிரச்சினைக்குக் காரணமான சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் உள்ள பாபர் மசூதி நிலத்தை ராமரின் பிறந்த இடம் என்றும், பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, சன்னி வஃக்பு வாரியம், ராம் லல்லா விராஜ்மன் ஆகிய மூன்று அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

நீண்டகால விசாரணை

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஓய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, அயோத்தி பிரச்சினை வெறும் நிலம் சார்ந்த பிரச்சினை கிடையாது என்று தெரிவித்திருந்தார் ரஞ்சன் கோகாய். இது நம்பிக்கை, மதம் மற்றும் உணர்வு சார்ந்த பிரச்சனை என்றும், இந்த வழக்கு விசாரணையில் மத்தியஸ்தம் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்துத்துவ அமைப்புகள் சார்பான வழக்கறிஞர்கள் இம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதையடுத்து நிர்மோஹி அகாரா உள்ளிட்ட சில முஸ்லிம் அமைப்புகள் மத்தியஸ்தர் குழுவிற்கு 6 நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரை செய்தன.

மூன்று பேர் கொண்ட குழு

கடந்த மார்ச் 8ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி பிரச்சினையில் சமரசம் பேச மத்தியஸ்தர் குழுவை அமைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் இக்குழு செயல்படும் என்றும், இதில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்ற 3 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பின் விபரம்

சமரசப் பேச்சுவார்த்தையை ஒரு வாரத்தில் தொடங்கி, 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை, ஊடகங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். உத்தரப் பிரதேசத்திலுள்ள பைசாபாத் நகரில் விசாரணை நடைபெறும் என்றும், அதற்குத் தேவையான உதவிகளை அம்மாநில அரசு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“சமரசம் பேச இன்னும் நபர்கள் தேவைப்பட்டால், அதை அந்தக் குழுவே முடிவு செய்து கொள்ளலாம். விசாரணை எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய நான்கு வாரங்களில் முதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற கண்காணிப்பில் கேமரா மூலம் பேச்சுவார்த்தை பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.

மத்தியஸ்தம் நடைமுறை

மத்தியஸ்தம் செயல்முறை என்பது, குற்றவியல் நடைமுறை கோட்பாட்டின்படி 23 விதி 3 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு “சமரச தீர்ப்பு” என்று அழைக்கப்படுகிறது. அயோத்தி போன்ற சிக்கலுக்கு உள்ளான வழக்கில், மத்தியஸ்தம் தலையிடும்போது, சில அடிப்படையான கேள்விகள் முன்வைக்கப்பட்டாலும், சிக்கல்கள் தீர்ந்து, ஒரு தீர்வு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்று விரும்புகிறதை இந்த வழக்கு உறுதிபடுத்துகிறது. 2019 மக்களவை தேர்தலில் பாஜக அறிக்கையில்கூட ராமர் கோயில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அயோத்தி பாபர் மசூதி வழக்கு நம்பிக்கைக்குரிய குற்றவியல் வழக்காகக் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஒரு மதத்திற்கு விஸ்வாசமாகவும், நில உரிமைக்காகவும் மட்டும் இல்லாது பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் இந்த வழக்கின் முடிவு இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆக.15 வரை அவகாசம்

மத்தியஸ்தம் குழு கடந்த 6ஆம் தேதியன்று சீலிட்டகவரில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று (மே 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான முடிவு

சமரச பேச்சுவார்த்தையை முழுவதுமாக முடிக்க இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று மத்தியஸ்தம் குழு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.