ரபேல் ஊழலை அடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக ஆக்கவேண்டும்  என்று பிரான்ஸ் ஐ.நா-விடம் வலியுறுத்தியுள்ளது.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை ஐ.நா-வின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.  மேலும் 10 நாடுகள் தற்காலிக (நிரந்தரம் அல்லாத) உறுப்பினர்களாக உள்ளன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டுமென்று நீண்ட காலமாக பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துவந்தன.  கடந்த  2015- ம் ஆண்டு, பான் கீ மூன் ஐ.நா  பொதுச்செயலாளராக இருந்தபோது,  நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா  பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது தொடர்பாக வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல சீனா எதிர்ப்பு தெரிவித்தது. வரைவு மசோதாவைத் தோற்கடிக்கச் சீனா பல எதிர்ப்பு வேலைகளையும் பார்த்தது. இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் ஒருங்கிணைந்து சீனாவிற்கு எதிராகக் குரல் கொடுத்தன. ஆனால், அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்தவண்ணம் இருந்தன. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு கிடைத்ததால், வரைவு மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நிரந்தர உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. அப்படி அதிகரிக்கப்பட்டால், இந்தியா நிச்சயமாகப் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக்கப்பட வேண்டுமென்று பிரான்ஸ் ஐ.நா-விடம் வலியுறுத்தியுள்ளது.  ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகளுக்கும் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆப்ரிக்கா  கண்டம்  சார்பில் ஒரு நாட்டுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ள பிரான்ஸ், எந்த ஆப்பிரிக்க நாடு என்பதைக் குறிப்பிட்டுக் கூறவில்லை.