ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டத்தை எதிர்த்துச் சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அதைதொடர்ந்து, அதிமுக கட்சி இரண்டாக உடைந்தது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு ஒரு அணியாகவும், சசிகலா- டிடிவி தினகரன் தரப்பு ஒரு அணியாகவும் பிரிந்தது. இருதரப்பினரும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு வேண்டும் என உரிமை கொண்டாடினர்.

இந்நிலையில், ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இல்லை சின்னத்தையும், பெயரையும் வழங்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா, தினகரன் தரப்பில் தனிதனியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்கரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கயது. இரட்டை இலை சின்னத்தைப் பழனிசாமிக்கும், ஓ.பன்னீா் செல்வத்திற்கும் தோ்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லுபடியாகும் என்று கூறிய நீதிபதிகள், டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதித்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தது. ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலா சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அமமுகவின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், சமீபத்தில் அமமுகவை கட்சியாகத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.