அருணாச்சலப்பிரதேசத்தில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு மலோகனம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்காக மட்டும் அருணாச்சல்-சீன எல்லையில் வாக்குச்சாவடி அமைத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

அருணாச்சலப்பிரதேசத்தில் வருகின்ற 11-ந் தேதி வாக்குப்பதிவு நடைப்பெறவுள்ளது. இதனையடுத்து வாக்குச்சாவடிகள் அமைத்தல் போன்ற தேர்தலுக்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது. அருணாச்சல்-சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் சில குடும்பங்கள் மட்டுமே வசித்துவருகின்றனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள வாக்குச்சாவடியைவிட்டு வேறு பொதுவான வாக்குச்சாவடியில் தங்களது பெயரை பதிவுசெய்துவிட்டனர். ஆனால், ஜனல்-தயாங் தம்பதியனர் மட்டும் பதிவுசெய்யாமல் இருந்தனர். வேறுவழியில்லாமல் 2014ஆம் ஆண்டு தேர்தலில், இவர்கள் இருவருக்காக மட்டுமே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கணவன் ஜனிலும் தன்னுடைய பெயரை வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றிவிட்டார். ஆனால் தயாங் மற்றும் மாற்றவில்லை என்பதால், அவர் ஒருவருக்காக மட்டுமே சரியான பாதை வசதி இல்லாத அக்கிராமத்திற்கு அனைத்துப் பொருட்களையும் சுமந்துக்கொண்டு  வாக்குச்சாவடி அமைக்கும் வேலையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள தேர்தல் அதிகாரி, “தயாங் ஓட்டு போடுவதற்காக மட்டும் நாங்கள் வாக்குச்சாவடி அமைத்துள்ளோம். அவர் எப்போது வந்து ஓட்டுப்போடுவார் என்று கூற முடியாது, அதுகுறித்து நாங்கள் அவரை வற்புறுத்தவும் உரிமை இல்லை. எனவே நாங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அவருக்காகக் காத்திருப்போம், அவர் எப்போது வேண்டுமானாலும் வந்து வாக்குப்பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.