பிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிராக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்துள்ள மனுவை அவசர வழக்காகக் கருதி நாளை விசாரிக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் நியமித்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் 2019 மக்களவை தேர்தலுடன், 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி  தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளன. அதிமுகவின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, இவர் பாஜகவை விமர்சித்தற்காக கடந்த ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “அதிமுக கட்சியின் விதிகள்படி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விண்ணப்ப படிவங்களில் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட அதிகாரம் உண்டு. எனவே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் வேட்புமனுவில் கையெழுத்திட தடைவிதிக்க வேண்டும். அந்த அதிகாரம் பொதுச் செயலளாருக்கு மட்டுமே உள்ளது.” எனத் தெரிவித்திருந்தார். தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த வழக்கை நாளை அவசரமாக விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

நாளை முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு கையெப்பம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.