துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயரை தேனி மக்களவை உறுப்பினர் எனக் குறிப்பிட்டு கோயிலில் கல்வெட்டு வைக்கப்பட்ட விவகாரத்தில் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி குச்சனூர் பகுதியிலுள்ள காசி ஸ்ரீஅன்னபூரணி கோயிலில், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை தேனி மக்களவை உறுப்பினர் எனக் குறிப்பி்ட்டு கல்வெட்டு வைக்கப்பட்டது. இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது.

தன் பெயரை தேனி மக்களவை உறுப்பினர் எனக் குறிப்பிட்டு கல்வெட்டு வைத்ததற்கு ரவீந்திரநாத் குமாரும் கண்டனம் தெரிவித்தார். தேர்தல் முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார் ரவீந்திரநாத்.

இந்நிலையில் ரவீந்திரநாத் குமார் அளித்த புகாரின் பேரில், தேனி சின்னமனூர் காவல் நிலையத்தின் முன்னாள் காவலரும், கோவில் நிர்வாகியுமான வேல்முருகன் கைது செய்யப்பட்டார். நம்பிக்கை மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.