காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து இன்று இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், தலைவரைத் தேர்வு செய்ய இன்றிரவு 8:30 மணிக்குக் காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடுகிறது என்றும் தெரிவித்துள்ளார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ளார். இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கக் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 10) காலை கூடியது.

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களான சோனியா கந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனை நடைபெற்றது. மதியம் சுமார் 12.30 மணியளவில், காரியக் கமிட்டிக் கூட்டத்திலிருந்து சோனியா காந்தியும், ராகுலும் வெளியேறினார்கள். இதுகுறித்து சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த ஆலோசனையில் நாங்கள் பங்கேற்காமல் இருப்பதுதான் சரியானதாக இருக்கும். புதிய தலைவரைத் தேர்வு செய்யும் நடைமுறையில் நானும், ராகுல் பங்கேற்பது சரியாக இருக்காது என்பதை ஏற்கெனவே முடிவு செய்து சொல்லி இருக்கிறோம்’’ எனக் கூறினார்.

இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக இன்று இரவு 8.30 மணியளவில் காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடுகிறது. அதன் முடிவில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதை அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.