உலக வரலாற்றில் மனித இனம் பல கொள்ளைநோய்களை சந்தித்துள்ளது. கடந்த சில மாதங்களாக covid-19 என்ற கொரோனா நோய் தொற்று, உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த நோய் குறித்த அச்சங்களும் போதிய விழிப்புணர்வும் மக்களிடையே இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை என்றுதான் தெரிகிறது. தனி நபர் சுத்தம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடி பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உலகம் முழுவதுமே பல விசித்திர சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அருகில் இருப்பவர்கள் சாதாரணமாக தும்பினாலோ அல்லது முகக் கவசம் அணிந்திருந்தாலோ அவரை ஒரு வேற்று கிரகவாசிபோல் உணர்ந்து அவரிடமிருந்து நகர்ந்து, விரைந்து வேறொரு இடத்திற்குச் சென்றுவிடுகின்றன. ஒருவகையில் இந்த செயல்பாடுகள் அனைத்தும் நோய்குறித்த அச்சம்தான் காரணம் என்றாலும் தங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் சிலர் அரசாங்கத்தையே ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

சம்பவம்: 1

திருச்சூர் சேர்ந்த வினோத்-இந்திரா தம்பதியினர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்துவந்தனர். இவர்கள் கடந்த மாதம் தங்களது வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். முறையான நோய் கண்காணிப்புக்கு பிறகே அவர்கள் கொச்சின் விமானநிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் சவுதி அரேபியாவிலிருந்து வந்திருப்பதால் இவர்களுக்குக் கண்டிப்பாக கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற தப்பான அபிப்பிராயத்தில் அப்பகுதியில் குடியிருந்த மக்கள் மற்றும் அப்பார்மெண்ட் அசோஷியேசன்ஸ் சேர்ந்து இவர்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று பேப்பரில் எழுதி கதவின்முன் ஓட்டியுள்ளார்கள்.

கடந்த ஞாயிறு அன்று இந்தத் தகவல் அறிந்து விரைந்த போலீஸார் இருவரையும் அழைத்து விசாரித்து மீட்டுள்ளனர், சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அப்பார்மெண்ட் அசோஷியேன்சன்ஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இருவரும் 28 நாட்கள் முறையான தனிமைப்படுத்தலில் இருந்துதான் மீண்டுவந்துள்ளனர் அவர்களைக் கண்டு அச்சப்படத்தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம்: 2

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி ஒன்றில் விபத்தின் காரணமாகச் சிகிச்சைக்கு சென்ற நபரை, ‘உனக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்று பயமுறுத்தி…’ இரண்டு வாரமாக அவரைத் தனிமைப்படுத்தி கொரோனா கண்காணிப்பில் வைத்திருந்த செய்தி பலரை ஆதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட நபர், கொல்லம் பகுதியில் சிறு விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். கடுமையான வலி காரணமாக அவர் மருத்துவமனை தீவிர கண்காணிப்பு அறைக்கு வேகமாக கத்திக்கொண்டே சென்று முதலுதவி எடுத்திருக்கிறார். என்ன நோய் காரணி என்றே பாராமல் அவரை மருத்துவர்கள் கொரோனா அறையில் கடந்த இரண்டு வாரமாக வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். பிறகு உனக்கு ஒன்றுமில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்ற மக்களின் விழிப்புணர்வை கண்டு ஆச்சர்யப்படுவதா, மருத்துவர்களின் அறியாமையை கண்டு கோபப்படுவதா என்று தெரியாமல் அரசாங்கங்கள் எவ்வாறு கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவருது என்று திகைத்துப்போயிருக்கிறார்கள்.. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள்; சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அரசாங்கமே நோயை கட்டுப்படுத்த யோசனை கேட்டால் மக்கள் என்ன செய்வார்கள்?