சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது திமுக.

அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூன்று பேரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்துகொண்டு, அதிமுகவிற்கு எதிராகச் செயல்படுவதாகச் சபாநாயகர் தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார் அதிமுக கொறடா ராஜேந்திரன். அந்த மனுவில், எம்எல்ஏக்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இதைதொடர்ந்து, சபாநாயகர் தனபால் இந்த புகார் மனு குறித்து 3 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சபாநாயகர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது திமுக.

அந்த மனுவில், “சபாநாயகர் தனபால் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இந்த மனுவை திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாக்கல் செய்தார். திமுகவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி வரும் திங்கட்கிழமை இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.