சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று (மார்ச் 21) காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து கனகராஜின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ். இவருக்கு வயது 64.  சுல்தான்பேட்டையை அடுத்த வதம்பசேரியில் உள்ள தன்னுடைய வீட்டில் இன்று செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்துள்ளார் கனகராஜ்.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்,  மாரடைப்பால் கனகராஜ் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கனகராஜின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுல்தான்பேட்டை ஊராட்சி தலைவராக இரண்டுமுறையும் மாவட்ட கவுன்சிலராக ஒருமுறையும் பதவி வகித்த கனகராஜ், கடந்த 2011 முதல் 2016வரை கோவை மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவராக இருந்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுடன் சேர்த்து, சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவால் தற்போது 22 தொகுதிகள் காலியாகவுள்ளன.