சென்னை உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதியாக வினீத் கோத்தாரி இருந்து வரும் நிலையில் இப்போது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1959இல் பிறந்த சாஹி, 1985இல் வழக்கறிஞராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தன் பணியைத் துவங்கினார். 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சாஹி, 2005இல் நிரந்தர நீதிபதியாக நியமனமானார்.

2018ஆம் ஆண்டு நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் சாஹி. அதேபோல, மேகாலயாவின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. மிட்டல், மத்தியப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாகவும் திரிபுராவின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கரோல், பாட்னாவின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.