திமுகவின் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட எம்பிக்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், மாநிலக் கட்சியான திமுக தமிழகத்தில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதனிடையே 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (17.06.2019) தொடங்கியது. முன்னதாக இக்கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை இடைக்காலத் தலைவராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், புதிய எம்.பி.க்களுக்கு மக்களவை இடைக்காலத் தலைவர் வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எம்.பி.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஆந்திரா, அசாம், பிகார், ஜம்மு-காஷ்மீர், கேரளம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா உள்பட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று பதவிற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர். திமுகவின் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட எம்பிக்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.