அமமுகவின் புதுக்கோட்டை மாவட்ட செயலராக இருந்த பரணி கார்த்திகேயன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

2019 மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வியைச் சந்தித்தது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அமமுகவில் உட்கட்சி பிரச்சனைகள் பெரிய அளவில் எழத்தொடங்கின. இதனால் கட்சியின்மீது அதிருப்தி தெரிவித்து, செந்தில்பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இதையடுத்து கொள்கைப் பரப்பு செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர் என இவர்களுக்கு திமுகவில் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அமமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும் அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் சகோதரருமான பரணி கார்த்திகேயன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரணி கார்த்திகேயன் இன்று (செப்டம்பர் 3) திமுகவில் இணைந்தார்.