வேலூர் காட்பாடியிலுள்ள துரைமுருகன் வீட்டில் 5.30 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள் 2 பைகளில் ஆவணங்களை எடுத்துச்சென்றுள்ளனர்.

காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் நேற்று(மார்ச் 29) சோதனை நடத்தினர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று இரவு துரைமுருகன் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறையினர், சோதனை நடத்த வந்துள்ளதாக தெரிவித்தனர்.

சோதனை நடத்த இரவு 10.30 மணிக்கு அதிகாரிகள் வந்த நிலையில், அங்கு வந்த துரைமுருகனின் வழக்கறிஞர்கள் இது சட்டத்துக்குப் புறம்பான சோதனை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 4 மணி நேர வாக்குவாதத்துக்குப் பின் மேலும் 3 அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்றுள்ளனர்

துரைமுருகனுக்குச் சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெறுவதால் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் அவரது வீட்டு வாசலில் திரண்டு வருகின்றனர். இதனால் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை மத்திய மாநில அரசுகளின் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்