சீன அரசை கடந்த சில மாதங்களாக நெருகடிக்களுக்குள்ளாகியிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது சீனாவைச் சுற்றியுள்ள பல நாடுகளுக்கு வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சினா நாட்டின் ஹூபே மாகாணம் உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அரசின் கட்டுபாட்டுக்குள் வைக்க திணறிவருகிறது. தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நாள்தோறும் வைரஸுக்கு தொடர்ந்து மக்கள் உயிரிழந்து வருவதால், பலி எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸுக்கு நேற்று ஒரே நாளில் மேலும் 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை மொத்தமாக 2345ஆக அதிகரித்துள்ளது.

397 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதும் நேற்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டதால், வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 76 ஆயிரத்து 288ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, சீனாவிலுள்ள சிறைகளிலும் கொரானா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறைகளில் இருக்கும் கைதிகள், அதிகாரிகளை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவத் தொடங்கியிருப்பதால் அந்தந்த அரசுகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மேலும் தென்கொரியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 400ஆக அதிகரித்துள்ளது. ஒரே இடத்தில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுத்திட, பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும், தென்கொரிய அரசு தடை விதித்திருக்கிறது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதால் தென் கொரிய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நோய் தொற்றினைக் குறைக்க பல்வேறு நகரங்களில் ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கப்பட்டு வரும் நிலையில், மருந்தில் உள்ள நச்சுத் தன்மை காரணமாக பறவைகள் மற்றும் சில உயிரினங்கள் பலியாகி வருவது சீனாவில் புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த மக்கள் குணமடந்து வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி நேற்று வரை 20 ஆயிரத்து 659 பேர் வீடு திரும்பியிருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் ஆய்வு நடத்தி வரும் சர்வதேச சுகாதார அமைப்பின் 12 பேர் குழு, உகானுக்கு இன்று செல்ல இருக்கிறது. அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதுடன் செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் முடிவெடுக்க உள்ளது.