தமிழகத்தில் கடும் தண்ணீர் பிரச்சனை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் 28ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 2ஆம் தேதி கூடியது. அதைதொடர்ந்து, 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

17ஆவது மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியானது. இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வரும் 28ஆம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

பேரவை கூடும் அன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும், அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி அவையை எத்தனை நாட்களுக்குக் கூட்டுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒருமாத காலம் இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ள நிலையில் சட்டப்பேரவை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்த காரசாரமான விவாதங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.