வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

17ஆவது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து 39 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதற்கிடையில், வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்யப் பணம் பதுக்கப்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு வருமான வரித் துறை அதிகாரிகள் பல கோடி ரூபாயை கைப்பற்றினர். இந்தப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு வரப்பட்டது என்று வருமான வரித்துறை உறுதி செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கான தேர்தலை, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி மாலை ரத்து செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றார். தமிழகத்தில் வேலூரை தவிர தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகள் திமுக கூட்டணி வெற்றிபெற்றது.

தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வரும் 11ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வரும் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். 19ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22ஆம் தேதி கடைசி நாள்.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திலும் ஏற்கனவே களத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.