ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

2018, மே 22ஆம் தேதியன்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு கடந்த 2018, மே 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம். மேல்முறையீட்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது என்று கூறிய உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 11) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஒரு வழக்கை ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக நீதிபதி கே.கே. சசிதரன் தெரிவித்தார்.

மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு தெரிவித்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும் எனத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று உத்தரவிட்டுள்ளார்.