திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இன்று (ஏப்ரல் 23) வெளியிட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்துமுடிந்தது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். மக்களவை தேர்தல் எவ்வளவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு இந்த இடைத்தேர்தலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலைக் கடந்த 13ஆம் தேதி அறிவித்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி – வி.வி. செந்தில்நாதன்

ஒட்டப்பிடாரம் -பெ. மோகன்

சூலூர் – வி.பி.கந்தசாமி

திருப்பரங்குன்றம் – எஸ். முனியாண்டி