“பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுவரை 220 மில்லியன் பயனர்கள் இணைத்துள்ளனர்; இன்னும் 180 மில்லியன் பயனர்கள் இணைக்கவில்லை; வருகிற ஆகஸ்டு 31க்கு பிறகு ஆதார் இணைக்கப்படாத பான் அட்டை அட்டைகள் முடக்கப்படும்; ஆதாரை இணைத்த பிறகே பான் அட்டைகளைப் பயன்படுத்த முடியும்” நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதைபோல வருமானவரி தாக்கல் செய்யவோ அதிக மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் செய்யவோ ஆதார் அல்லது பான் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்; ஆனால் ஆதாரும் பான் கார்டும் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்; செப்.1 முதல் அவ்வாறு இணைக்கப்படாமல் ஆதார் பயன்படுத்தி புதிய பரிவர்த்தனைகளைச் செய்யும்போது வருமான வரித்துறை புதிய பான் எண்ணை வழங்கும் என்றும் அதனை பயன்படுத்தி புதிய பான் அட்டையை இணையத்திலேயே தரவிறக்கிக்கொள்ளலாம் என்றும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி பான் அட்டைகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்காகவே ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று வருவாய்ச் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் மற்றும் பானை இணைப்பதற்கான கால அவகாசத்தை இத்தனை முரை நீட்டித்தும் இணைக்காவிட்டால் அவற்றின் உண்மைத் தன்னைமீது சந்தேகம் எழுகிறது; எனவே அவை முடக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.