சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கல்வித் தரத்தினை காட்டிலும், பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என நிதிஆயோக் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய அரசியலமைப்பின் படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு எதிரான தனியார் பள்ளிகளின் விகிதம் 7: 5 என்ற நிலையில் உள்ளது. தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டத்தில் இந்தியாவில் அதிக அளவிலான தனியார் பள்ளிகள் உள்ளன. 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களில் 71% மாணவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் கல்வி பெறுகின்றனர். எஞ்சியிருக்கும் 29% மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் பயில்கின்றனர்.

இந்நிலையில் நிதிஆயோக் திட்டத்தின் மூலம் கல்வியின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், இந்தியாவில் கல்வித் தரத்தினை காட்டிலும், பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தகுதியற்ற முறையில் இயங்கும் பள்ளிகளில் கல்வித்தரம் பாதிக்கப்பட காரணமாக உள்ளது.  4 லட்சம் பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும்  2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 1.5 கோடி மாணவர்கள் நிர்வாகம் சரியில்லாத பள்ளிகளில் பயில்கின்றனர்.

ராஜஸ்தான், ஒடிசா, மத்தியபிரதேசம்,  ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் கிராமப்பகுதிகளில் 1 ஆசிரியரின்கீழ் 100 மாணவர்கள் பயில்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்விக்கென இந்தியாவில் அதிக அளவிலான பள்ளிகள் இருந்தபோதிலும், கல்வியின் தரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் ஒத்திருக்கும் சீனாவை காட்டிலும் இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர கல்வியின் தரம் குறைந்துக்கொண்டே வருகின்றது.
என இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.