நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ‘மஸ்ஜித் அல் நூர்’ மசூதி மிகவும் புகழ்பெற்றது.  அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மசூதியில் நேற்று (15.03.2019) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்தத் தாக்குதலின்போது மசூதியில் நூற்றுக்கும் அதிகமானோர் இருந்துள்ளனர். இதனால், மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி வீரர்கள் நியூசிலாந்திற்குச் சென்றுள்ளனர். இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது, வங்கதேச வீரர்கள் மசூதியில் இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “அடுத்தடுத்து, இரண்டு இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவத்தை வைத்து பார்க்கும்போது, அவர்கள் நியூசிலாந்தில் யாரும் மசூதிக்குச் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுப்பதாக தெரிகிறது” என தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறும்போது, “இன்றைய நாள், நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள். இது எதிர்பாராத வன்முறை சம்பவம்.” என்றார்.

மேலும் இச்சம்பவத்தில் 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக நியூஸிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் உயிருக்குப் போராடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.