அதிதீவிர புயலான ஃபானி புயல் ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் கரையைக் கடந்து, வலுகுறைந்த நிலையில், வங்கதேசம் நோக்கி நகர்ந்து செல்கிறது. ஒடிசாவில் புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், அதி தீவிரப் புயலாக மாறி, காலை 8 மணி அளவில் ஒடிசா கடற்கரையை நெருங்கியது. 8.30 மணி அளவில் புயல் கண்ணின் ஒரு பகுதி பூரி கடற்கரையைத் தொட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கண்பகுதி கரையை கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

அதி தீவிர புயல் என்பதால், புயலின் கண் பகுதி கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. முன்னெச்சரிக்கையாக கடந்த 24 மணி நேரத்தில் கஜபதி, கஞ்சம், கட்டாக், ஜகத்சிங்பூர் ஆகிய 14 மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசித்த 11 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூரி, கோபால்பூர் ஆகிய பகுதிகளில் கடுமையான சூரைகாற்று வீசியதில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்துகிடக்கின்றன. இதன்காரணமாக புயல் கரையை கடந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

புயலால் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை சீர்செய்யும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புவனேஸ்வரத்தில் இன்று நள்ளிரவு வரை விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒடிசாவில் புயலுக்காக இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது ஃபானி புயல், வடகிழக்கே மேற்குவங்கம் நோக்கி நகர்கிறது. அதன் பிறகு வங்கதேசத்தில் கரையைக் கடந்து வலுவிழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்றதொரு அதி தீவிர புயல் 1999ஆம் ஆண்டில் ஒடிசாவைத் தாக்கியது. அப்போது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் இந்த முறை முன்னெச்சரிக்கை உயிர்ச் சேதம் ஏதும் பெருமளவில் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம் நோக்கி புயல் நெருங்குவதால் கடற்கரையோரத்தில் உள்ள 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசும் என்றும், 4 முதல் ஐந்து அடி வரை கடலில் அலைகள் எழும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.