ஆசிய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு தைவான் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்தக் கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது.

இதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று நேற்று(17.05.2019) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 எம்.பி.க்களும், எதிராக 27 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

இதன் மூலம் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை தைவான் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பினால் எல்.ஜி.பி.டி.யினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.