தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத கம்பங்களையும் அகற்ற வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கானது தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்ததுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, 21 மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி ஆகிய பகுதியில் உள்ள கம்பங்களை அகற்றியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஊரக பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 58,172 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 799 கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து ஆகியவற்றிலும் கொடிக்கம்பங்கள் அகற்றியது தொடர்பாக 21 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக, தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைகேட்ட நீதிபதிகள், சென்னை உட்பட மீதமுள்ள 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றி, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.