மணமுடித்த பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த விவேக் என்பவர் கஞ்சர்பாட் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர். அம்பர்நாத் என்ற பகுதியில் வசித்துவரும் இவர் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஊர் வழக்கப்படி, புதியதாக திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட வேண்டும். இதற்கு அந்த ஊரைச் சேர்ந்த பல இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான விவேக், ஊரின் வழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மணமுடித்தார். இதை ஏற்க மறுத்த ஊரார், விவேக்கின் மனைவிக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறிவந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதில், விவேக் குடும்பத்தினர் நமது கலாச்சரத்தைக் கலங்கப்படுத்திவிட்டனர். அதனால் அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதுமட்டுமில்லாமல் விவேக்கின் பாட்டி உயிரிழந்த போது ஊரில் இருந்து யாரும் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தவிர, சாவு நடந்த வீட்டுக்கு அருகிலேயே கல்யாண பாடல்களை ஒலிக்கச் செய்து அனைவரும் அடிப்பாடி கொண்டாட்டமாக இருந்துள்ளனர்.

இதனால் மிகவும் வேதனை அடைந்த விவேக், ஊராரின் நடவடிக்கை குறித்து அம்பேத்நாத் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த நாட்டாமை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

நன்றி: scroll.in