OLA கேப்ஸ் நிறுவனம், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் அந்நிறுவனத்தில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் 6 மாதங்களுக்கு தடை விதித்தது கர்நாடக போக்குவரத்து துறை.

தினமும் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள ஓலா கேப்ஸ் (Ola Cabs) என்பது வாடகை கார் சேவை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் முதன்முதலில் தொலைதொடர்பு மூலமாக மும்பையில் தன் சேவையை ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து  தற்போது அதன் சேவையை இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் OLA கேப்ஸ் நிறுவனம், போக்குவரத்து விதிகளை மீறியதாகக்கூறி  நேற்று கர்நாடக போக்குவரத்து துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில்,

OLA நிறுவனம் அவசர தொழில்நுட்ப சேவை வாகனங்கள் விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றது. மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும். OLA,  இந்தச் சேவையை எவ்வித அறிவிப்புமின்றி செயல்படுத்தி வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து 1 வாரத்தில் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அந்த நிறுவனம் அளித்த பதில் ஏற்புடையதாக இல்லை. எனவே OLA நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி OLA நிறுவனத்தில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் 6 மாதங்களுக்கு கர்நாடகா முழுவதும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. OLA ஓட்டுனர்கள் தங்கள் ஓட்டுனர் உரிமங்களை போக்குவரத்து துறையிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக போக்குவரத்து துறையின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து OLA நிறுவனம் கூறுகையில், ‘இந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு தொடர்ந்து ஏற்பாடுகள் செய்து வருகிறோம்’ என கூறியுள்ளது .