2001ஆம் ஆண்டு ஜீவஜோதி என்பவரின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்.

சரவண பவன் உணவக மேலாளரின் மகள் ‌ஜீவஜோ‌தி. இவர் நாகை மா‌வ‌ட்ட‌ம், வேதார‌ண்ய‌த்தைச் சே‌ர்‌ந்‌தவர். ஜீவஜோ‌தியின் கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர். 2001ஆம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சா‌ந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செ‌ய்ததாக குற்றம் சா‌ற்றப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால், டேனியல், கார்மேகம், காசி விஸ்வநாதன், உசேன், தமிழ்ச்செல்வன், முருகானந்தம், சேது, பாண்டுரங்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இ‌ந்த வழ‌க்‌கை விசாரித்த சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டுகள் ‌கடுங்காவல் சிறை‌த் த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்து உத்தரவிட்டது. மேலும், மற்ற குற்றவாளிகள் 8 பேருக்கு, 7 முதல் 9 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, ராஜகோபால் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மேலும் உயர்த்தி வழங்கக் கோரி அரசு சார்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றியதோடு, 55 லட்ச ரூபாய் அபராதத்தையும் உறுதி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ராஜகோபால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. தற்போது பிணையில் இருக்கும் ராஜகோபால், ஜூலை 7ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.