துபாயில் கடந்த சனிக்கிழமை அன்று நடைப்பெற்ற சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழாவில் கென்யாவைச் சேர்ந்த  பீட்டர் தபசி சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 2015 முதல் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா நடைப்பெற்று வருகின்றது. கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை, ஆசிரியர் பணியில் மிகவும் ஆர்வம் ஆகியவை இவ்விருதை வெல்வதற்கான தகுதிகளாக கருதப்படுகின்றன. இந்நிலையில் 2019 ஆண்டிற்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் நடைப்பெற்றது. இதில் கென்யாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் தபசி(36) சிறந்த ஆசியராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவர் தனது சம்பளத்தின் 80%  ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிட்டு வருகிறார். மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வறுமையில் இருந்து மீள்வது குறித்தும் பேசி, அவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார்.

விருது வென்றது குறித்து பீட்டர் கூறியதாவது, “ஆப்பிரிக்காவில் தினந்தோறும் புதிய பக்கங்களையும் புதுப்புது அத்தியாயங்களையும் சந்தித்து வருகின்றோம். இவ்விருது எனக்கானது அல்ல, எனது நாட்டின் மாணவர்களுக்கானது.  என் மாணவர்களின் சாதனைகளாலேயே நான் இங்கு உங்கள்முன்னே நிற்கிறேன். இந்த விருது மாணவர்கள்  மேலும் சாதிக்க ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. சர்வதேச அளவில் 10 இறுதிப்போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் நான் இவ்விருதினை  பெற்றது உத்வேகம் தருகிறது” என்றார்.

பீட்டரை பாராட்டிய கென்யா பிரதமர் உகுரு கென்யட்டா ,”உங்கள் சாதனை சரித்திரம், ஆப்பிரிக்காவின் சரித்திரமாகும். இளம் சாதனையாளர்களால் இந்த நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது” என தெரிவித்தார்.