மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைதான பேராசிரியர் நிர்மலா தேவி, 11 மாத சிறைவாசத்துக்குப் பின்பு மதுரை சிறையில் இருந்து இன்று (மார்ச் 20) ஜாமீனில் வெளியே வந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலா தேவி. சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இவர் கைதானார். நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட நீதிமன்றங்களில் இவர்கள் மூன்று பேரும் ஜாமீன் கோரி பலமுறை மனு தாக்கல் செய்தனர். ஆனால், மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன்வழங்க மறுப்பு தெரிவித்து வந்தது. இவர்கள் மூன்று பேரும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுவந்தனர். இந்த வழக்கினை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தினமும் விசாரித்து வந்தது.

நிர்மலா தேவி வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதால், இதனை சிபிஐக்கு மாற்றக் கோரி அனைத்து இந்தியமாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் வழங்கக் கோரி, நிர்மலா தேவி மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, சில நிபந்தனையுடன் நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதாக கடந்த 12ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜாமீனுக்கான ஆவணத்தில் கையெழுத்திட நிர்மலா தேவியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மறுத்துவிட்டதால், நிர்மலாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. ஜாமீன் கிடைத்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்தார் நிர்மலா தேவி. இந்நிலையில் அவரது உறவினர் கைழுத்திட்ட கோப்பு மதுரை மத்தியச் சிறைக்கு இன்று வந்தது. அதைத் தொடர்ந்து, 11 மாத சிறைவாசத்துக்குப் பின் மதுரை சிறையில் இருந்து இன்று ஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி.

இந்த வழக்கில் தொடர்புடைய முருகன், கருப்பசாமி ஆகியோருக்குக் கடந்த மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.