தமிழகத்தில் செயற்கை மழையை ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். முக்கிய அணைகள் முறையாக தூர்வாரப்படாததால் அதன் கொள்ளவைவிட மிக்குறைவான நீர் மட்டுமே சேமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால் மக்கள் தண்ணீரின்றி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால், தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் கால அடிப்படையில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், 2020ஆம் ஆண்டில் தமிழகம் தண்ணீர் இன்றி சுடுகாடாகும் என்ற “நிட்டி” ( NITI ) அமைப்பின் ஆராய்ச்சி முடிவையும் குறிப்பிட்டு போர்க்கால அடிப்படையில் அணைகளைத் தூர்வாரி தண்ணீர் சேமிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கே.கே.ரமேஷ் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், “அனைத்து மாவட்டங்களிலும் தடையின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்புவதோடு, தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், சேமிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்” என்றும் மனுவில் கோரியிருந்தார் ரமேஷ்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மரங்கள் அனைத்தையும் வெட்டி,  நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து பாதுகாக்க தவறிய நிலையில், நீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை மழையை நாடுவதை தவிர வேறுவழி இல்லை என்று கூறினார். மேலும், அதற்கான திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆறூ ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.