பல்வேறு மொழி மாநிலங்களில் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் செவிசாய்த்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பா.ஜா.க எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார், நடிகர் சல்மான்கான் வழிநடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாகக் கூறியுள்ளார்.
அந்த கடித்ததில் இந்தியா இழந்துவிட்ட பெருமையை, பொலிவை மீட்டெடுப்பதற்காகப் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மறுபக்கம் இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன என்று நந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியாத வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதாகவும், இனி தொலைக்காட்சி நிகழ்ச்சி களையும் தணிக்கைக்கு உட் படுத்துவது அவசியம் என்றும் தமது கடிதத்தில் எம்எல்ஏ நந்த் கிஷோர் வலியுறுத்தி இருப்ப தாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார் எழுதிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதத்திற்கு பலரும் தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் இந்த கடிதத்திற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், உத்தரப்பிரதேச நவ நிர்மாண் சேனா தலைவர் அமித் ஜானி, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நிறுத்தப்படும் வரை எந்த தானிய உணவையும் சாப்பிட மாட்டேன். பழங்கள், காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்வேன் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்துப் பேசிய மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஆய்வறிக்கை வழங்குமாறு ஒளிபரப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆய்வறிக்கை சமர்ப்பித்த பிறகு பிக்பாஸ் தடை செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இந்தி பிக்பாஸ் மட்டும்தான் தடை செய்யப்படுமா அல்லது அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளும் தடை செய்யப்படுமா என்பது குறித்து அதில் குறிப்பிடவில்லை. என்றாலும் மற்ற மொழிகளிலும் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிராகப் புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த பிக்பாஸ் சீசன் 3 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் முகேன் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.