தமிழகம் முழுவதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களின் மீது, கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் அவற்றில் எத்தனை வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும்

புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளாறு, அக்னி ஆறு, குண்டாறு, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. ஆற்றுப்பகுதியில் அதிகளவு மணல்  அள்ளப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, மணல் கடத்தலை தடுக்க, முக்கியச் சாலைகளில் சிசிடிவி கேமிராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும். “எனக் கோரியுள்ளார்.

இந்த பொதுநல வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் மணல் எடுத்து செல்லும் லாரிகளின் எடையை கணக்கிட எடை மேடை அமைக்கப்பட்டுள்ளதா? மணல் லாரிகளை கண்காணிக்கவும், மணல் திருட்டை தடுக்கவும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

எத்தனை வழக்குகள்?

மணல் திருட்டு, மற்றும் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் என்ன? என்றும் மணல் கடத்தல் குறித்த வழக்குகளை விசாரிக்க ஏதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்றும் வினவிய நீதிபதிகள், கடந்த 5 ஆண்டுகளில், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் அவற்றில் எத்தனை வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பபட்டது.

தமிழ்நாட்டிலிருந்து, பிற மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுகிறதா? என்றும், மணல் திருட்டை தடுப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு, பொதுப்பணித் துறைச் செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.