சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது தொடர்பாக எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சவுடு மணல் குவாரி

“திண்டுக்கல் மாவட்டத்தில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீர் நிலைகளைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்” என்று கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கப்பட்ட டி.லஜபதிராய் திண்டுக்கல் மாவட்ட மண் குவாரிகளை ஆய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கையை அளித்தார். அதில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தில் அரசு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக சவுடு மண் அள்ளப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மணல் கொள்ளைக்கு அரசு துணை

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால் மனிதர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.” என்று கூறினர். சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகளிடம் மனுதாரர் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அரசு எந்திரம் துணைபோகிறது என குற்றம் சாட்டினார்கள்.

“சட்டவிரோத மணல் கொள்ளையர்கள் மீது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஏற்கெனவே ஒரு வழக்கில் மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை. பழனி சித்தரேவு கிராமத்தில் உரிமம் பெறப்படாத இடத்தில் தனி நபர் சட்டவிரோதமாக குவாரி நடத்த அனுமதித்த அதிகாரிகள், 75 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும்.” என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

அபராதத் தொகை எவ்வளவு?

அதைதொடர்ந்து, “தமிழகத்தில் மாவட்ட வாரியாக மணல், சவுடு மண், ப்ளூமெட்டல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட இடங்கள் எத்தனை? சட்டவிரோதமாக குவாரிகள் இயங்கிவரும் பகுதிகள் எத்தனை? நீதிமன்ற உத்தரவுப்படி சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது தொடர்பாக எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் என்னென்ன பொறுப்புகளில் உள்ளனர்? ” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர் நீதிபதிகள்.

மேலும், மணல் கொள்ளை தொடர்பாக என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மணல் கொள்ளையர்களிடம் இருந்து கடந்த பத்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.