வாட்ஸ்அப் செயலியை ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும் உடனடியாக அச்செயலியை அப்டேட் செய்யுமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலகளவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ என பல நிறுவன ஊழியர்கள் தங்கள் வேலைக்கு வாட்ஸ் அப்பையே பயன்படுத்துகிறார்கள். அதனால் வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது. அதனடிப்படையில் அவ்வப்போது அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.

சில முக்கிய பிரபலமான பயனாளர்களை மட்டும் கண்காணித்து திறன்பெற்ற ஹேக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் முதலில் ஹேக் செய்யப்பட வேண்டிய ஆட்களுக்கு வாட்ஸ் அப் அழைப்பு கொடுக்கிறார்கள். அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் சாப்ட்வேர் குறிப்பிட்ட செல்போனில் தானகவே இன்ஸ்டால் செய்யப்படுகிறது. அதன்பின் அந்த செல்போன் ஹேக்கர்களால் தொடர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களது பயனாளர்கள் அனைவரையும் உடனடியாக வாட்ஸ் அப் அப்டேட் செய்யக் கோரி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள வாட்ஸ் அப் அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதால் அதனை அப்டேட் செய்துகொள்ள வேண்டுமாறு பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.