மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய யுபிஎஸ்சி தேர்வில், நாட்டிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார் கனிஷாக் கட்டாரியா. மேலும், யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில் வெறும் 35 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 759 பணிகளுக்காக நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர். இந்நிலையில், முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை முடிந்து இறுதி முடிவுகள் இன்று (ஏப்ரல் 4) வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வில் நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்வாகியுள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கனிஷாக் கட்டாரியா. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் ஐஐடி மும்பையில் பி.டெக் பட்டம் பெற்றவர். இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலம், போபாலை சேர்ந்த சுருஸ்தி ஜெயந்த் தேஷ்முக் என்ற பிஇ பட்டதாரி பெண், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

நாடுமுழுவதும் 577 ஆண்கள் மற்றும் 182 பெண்கள் என மொத்தம் 759 பேர் இதில் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து 35 பேர் மட்டுமே இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அகில இந்திய அளவில் 23ஆவது இடத்தையும் தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளார் சி.ஏ.ரிஷப்.  தமிழக அளவில் 2ஆம் இடமும் அகில இந்திய அளவில் 49ஆவது இடமும் பெற்றுள்ளார் ரெஜினாமேரி. அபிசேக் அகில இந்திய அளவில் 79 இடமும் தமிழக அளவில் 3ஆவது இடமும் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இத்தேர்வில் 42 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில் 35 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான எண்ணிக்கையில் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அளவில் முதல் இடத்தைப் பிடித்த ரிஷப், மதுராந்தகத்தைச் சேர்ந்தவர். எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், இன்போசிஸ் நிறுவனத்தில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு இத்தேர்வுக்காக படித்ததாகக் கூறுகிறார். மூன்றாவது முறையாக இத்தேர்வை எழுதி இந்த முறை வெற்றிகரமாகத் தேர்ச்சி அடைந்துள்ளார் ரிஷப்.

தமிழகத்தில் தேர்வாகிய 35 பேரில் 30 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.