15 ஜூன் 1990
கேசி பிலிம்ஸ் கோவை செழியன் தயாரிப்பு
இயக்கம்: கே.மது .கதை கே.என் ஸ்வாமி வசனம் கே.குணா
நடிப்பு: மம்முட்டி, சரத்குமார், ஒய்ஜி மகேந்திரா, நாகேஷ், ஜெய்கணேஷ், சார்லி, குமரிமுத்து, பீலிசிவம் ஆர்.எஸ்.சிவாஜி என்னத்த கன்னய்யா எம்.எஸ்.திருப்போணீத்துரா, ஜெய்சங்கர், ஸ்ரீஜா அமலா ஒய்.விஜயா சுகுமாரி பொன்னம்பலம் மற்றும் பலர்

சுந்தரத்தின் தம்பி பாலுவின் மனைவி விஜயலக்ஷ்மி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்கிறாள். விசாரணையில் அது கொலை என்றாகி அதற்கான காரணகர்த்தா என்று சுந்தரத்தை போலீஸ் கைது செய்கிறது. விஜியின் அண்ணனும் அம்மாவும் சுந்தரத்தின் பரம எதிரி பரமசிவம் தூண்டுதலால் வழக்கை நடத்த கீழ்க்கோர்ட்டில் சுந்தரத்திற்கு தண்டனையாகித் தீர்ப்பாகிறது.

சுந்தரத்தின் தங்கை ஹேமாவுக்கும் சுப்ரீம் கோர்ட் வக்கீல் கேஸி ராஜாவுக்கும் ஏற்கனவே அறிமுகமும் முரண்பாடும் உண்டு. தன் அண்ணனுக்காக வாதாட ராஜா அமர்த்தப்படுவதை முதலில் ஆட்சேபிக்கும் ஹேமா பிறகு புரிந்துகொண்டு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறாள். தான் வாதாட வந்ததன் முக்கியக் காரணம் ஹேமாவின் அண்ணன் சுந்தரம் என்பதனால்தான் என லேசாய்க் கோடிட்டுக் காட்டுகிற ராஜா வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவாக்கி நடத்தத் தொடங்குகிறான். மறுவிசாரணையின் முடிவில் சுந்தரம் நிரபராதி என்பதை நிரூபித்து உண்மையான கொலையைச் செய்த நட்ராஜனை அவனைக் காப்பாற்ற துணையாயிருந்த சுந்தரம் வீட்டு வேலையாள் மணியின் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து ஜெயிக்கிறான் ராஜா.

இந்தப் படத்தின் மூலமாக நேரடியாகத் தமிழ்ப் படங்களில் நடிகராகத் தன் கணக்கைத் தொடங்கி சொந்தக் குரலில் தனக்காகப் பேசவும் செய்தார் மம்முட்டி. நீதிமன்றக் காட்சிகளும் கொலைவழக்கை படிப்படியாக விசாரித்து யார் குற்றவாளி என்பதை அறிவதற்காக கட்டமைக்கப்பட்ட காட்சிகளும் படத்தை ரசிக்க வைத்தன. உளவியலினூடான அச்சத்தை இப்படத்தின் இசைக்கோர்வைகள் எங்கும் படர்த்தினார் இளையராஜா.

தோரணங்களாகக் கதையின் கிளைகள் தொங்கினாலும் அலுப்பூட்டிவிடாமல் படத்தின் கடைசித் துளிவரைக்கும் விறுவிறுப்பை மேலாண்மை செய்திருந்தார் இயக்குனர் மது.

இந்தப் படத்தின் பலம் இதன் நடிகர்கள் நாகேஷ் தொடங்கி ஒய்ஜி மகேந்திரா வரைக்கும் ஒய் விஜயா தொடங்கி சுகுமாரி வரைக்கும் எல்லோருமே தாங்கள் ஏற்ற பாத்திரங்களை அத்தனை அழகாக அளவாகப் பரிணமித்துக் காட்டினர். வசனம் இப்படத்தின் ஆகப்பெரும் காரணியாயிற்று. மம்முட்டியின் ஆளுமையும் அவரது முதலாவதான தமிழ்த்திரைத் தோற்றமும் நன்றாகவே எடுபட்டது.

நாகேஷூக்கும் அவரது உதவியாளர் பால்காட் என்ற வேடத்தில் நடித்த மலையாள நடிகர் எம்.எஸ்.திருப்போணீத்துராவுக்கும் இடையே நடைபெறக்கூடிய உரையாடல்களும் அவர்கள் இருவரின் உடல்மொழியும் முகபாவங்கள் இன்னபிறவெல்லாம் அபாரமாய் இருந்தன. அவர்கள் இருவரும் அதுவரை தமிழ்த்திரைக்களம் கண்டிராத புதிய இணையாகத் தோன்றினர். சின்னச்சின்ன நுட்பமான இழைதல்களால் கட்டமைக்கப்பட்ட திரைக்கதை மௌனம் சம்மதம் படத்தின் பெரும்பலமாயிற்று. புலமைப்பித்தன் எழுதி ராஜா இசையமைத்த கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா தமிழ்ப் பாடல்களின் சரித்திரத்தில் கரையாத மாயக் கற்கண்டாக இன்றளவும் இனித்து வருகிறது.

சார்லியின் திரை வாழ்வில் முதன்மையான வேடம் இந்தப் படத்தின் திருப்புமுனையே அவர் ஏற்ற மணி எனும் வேலைக்காரன் வேடம்தான். தொடக்கம் முதலே நடிப்பதற்கான நல்வாய்ப்பு. அதனை அவர் நிறைவேற்றிய விதம் அளப்பரியது. மௌனம் சம்மதம் தமிழின் துப்பறியும் படங்கள் வரிசையில் என்றும் மாறாத பெருவிருப்பத்திற்குரியது.