அங்கே என்ன சத்தம் – 4

என்னுடன் பணிபுரியும் ஒரு கவிஞரிடம் தொடர்ந்து நாவல் எழுதும்போது ஏற்படும் ஒரு மனக்குழப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நாவலில் வரும் பாத்திரங்களின் கடுமையான அகப்பிரச்சனைகள், குழப்பங்கள், தவறான முடிவுகள், அதன் அவலங்கள் அவற்றை எழுதும்போது அப்படைப்பாளியைத் தீண்டுவதில்லை. எழுதும்போது ஒரு கண்ணீர் மல்கிய உரையாடலோ பதற்றமாக்கும் விவரணையோ நாவலாசிரியனுக்கு இன்பமான கிளர்ச்சியையே அளிக்கிறது. ஆனால் அன்றைக்கான எழுத்தை முடித்துவிட்டு அவன் தன் அன்றாட வாழ்வுக்கு மீளும்போது மனத்தில் ஒரு இருள் வந்து கவிகிறது.

அந்த இருளுக்கும் அன்றாட வாழ்வுக்கும் சம்மந்தம் இருக்காது. அன்றாட வாழ்வு எளிதாக சுகமாக இருக்கும்போது நீங்கள் ஏதோ கொலை களத்தில் இருப்பதைப்போல உணர்வீர்கள். மனம் எழுதி முடித்ததில், அடுத்து எழுதப் போகிறதில் உழன்றுகொண்டே இருக்கும். மனதைத் திருப்பும் விதம் பொழுதுபோக்கில் சம்பாஷணைகளில் ஈடுபட்டாலும் அது விட்டுப்போவதில்லை – எரிச்சலாக கோபமாக மாறி உங்களைத் தொந்தரவு பண்ணியபடி இருக்கும். சில நேரம் இதனாலே நான் அன்றன்றைக்கு எழுதும் பணியை தள்ளிப் போட்டபடியே இருப்பேன்; வாசிப்பதுகூட நாவலுக்குள் வருகிற சிக்கல்களை நினைவுபடுத்தும் என்பதால் அதுவும் இதம் தராது. நாவல் எழுத வேண்டிய நேரத்தில் நான் பல்வேறு சின்ன வேலைகளில் என்னை பிஸியாக்கிக் கொள்வேன். சில நேரம் கட்டுரை எழுதுவேன். ஆனால் அன்று தூங்கும் முன் சில வரிகளாவது நாவலில் எழுதித் தானே ஆக வேண்டும், அப்போது மீண்டும் பேய் வந்து தலைக்குள் உட்கார்ந்து கொள்ளும்.

இன்னொரு சிக்கல் தொடர்ந்து எழுதி வரும்போது நாவலில் உள்ள சம்பவங்களும் மனிதர்களும் நிஜமாகவும் அன்றாட வாழ்வில் நம்முடன் இருப்பவர்கள் முக்கியமற்றவர்களாகவும் (பொய் என்றல்ல) தோன்றுவது; இதை வளர விட்டால் நிஜம் நிழலாகும்; நிழல் நிஜமாகும்.

நாவல் எழுதும் காலத்தில் நான் எந்த எழுத்தாளனுடனும் இருந்து கவனித்ததில்லை; ஆனால் ஜெயமோகன் அக்காலத்தில் மனத்தொந்தரவுக்கு உள்ளாவார் என்றும், நாவல் எழுதி முடித்த பின் ஒவ்வொருமுறை எஸ்.ரா உடல்நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்குச் செல்வார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அண்மையில் தமிழ்நதி பேஸ்புக்கில் நாவல் எழுதுகையில் தான் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகளைப் பற்றி எழுதி இருந்தார்.

மராத்தான் ஓட்டம் குறித்து முராகாமி எழுதி புத்தகத்தில் (What I Talk about When I Talk about Running) இது நமது அடிமனத்தின் தீவிர உணர்வுகள் மேலெழுந்து வருவதன் நெருக்கடி என்கிறார். மெல்லுணர்வுகளால் ஆன எழுத்தாளனால்தான் எழுதும் மொழிக்கு வெளியே இந்த உணர்வுகளை கையாள முடிவதில்லை என்கிறார். முராகாமி இதற்கு உடற்பயிற்சியை ஒரு தீர்வாக சொல்கிறார் – ஆனால் எனக்கு உடற்பயிற்சி எப்போதும் தற்காலிகத் தீர்வையே தந்துள்ளது.

நான் சொல்வதையெல்லாம் கேட்டு விட்டு கவிஞர் தனக்கு ஒரு கவிதையை எழுதி முடிக்கும்போது இப்படியான மனநிலை ஏற்பட்டதுண்டு எனச் சொன்னார். ஆச்சரியமில்லை, கவிதை என்பது ஒரு உன்மத்த நிலையில் எழுதப்படுவது அல்லவா! மொழியில் ஏற்படும் ஒருவித கோர-விபத்து தான் கவிதை. ஒரு சிறந்த கவிதைகளுக்குள் நுழைந்து ரத்தமும் சகதியுமாய் வெளியேறும் கவிஞன் அவ்வளவு மனத் திளைப்புக்குப் பிறகும் இயல்பாக அன்றாட காரியங்களைப் பார்த்துவிட்டு இருப்பதே ஒரு பெரிய சாதனைதான் என்பேன்.

முந்தைய தொடர்கள்:

3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்https://bit.ly/2QuC09r

2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்https://bit.ly/2Qsg1jn

1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
  2. கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
  3. ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
  4. கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ் 
  5. முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
  6. காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
  7. சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
  8. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
  9. ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
  10. தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
  11. ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
  12. பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
  13. அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
  14. காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
  15. எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
  16. ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
  17. சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
  18. யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்