திப்பு சுல்தான் பயன்படுத்திய கலைப்பொருட்கள் அனைத்தும் லண்டனில் உள்ள ஏல நிறுவனம் ஒன்றில் ரூ.97.32 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

1782 ஆம் ஆண்டு முதல் 1799 ஆண்டுவரை ஆங்கிலேயருக்கு சவாலாக இருந்தவர் மைசூர் பேரரசை  ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். இவர் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த போரில் உயிரிழந்ததையடுத்து இந்த வெற்றியின் நினைவாக திப்பு சுல்தான் பயன்படுத்திய 8 கலைப்பெருட்களை அங்கிலேய அதிகாரி மேஜர் தாமஸ் ஹார்ட் என்பவர் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றார்.

கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தின் பெர்ஷைரை(Berkshire) சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது பழமையான வீட்டைச் சுத்தம் செய்தபோது திப்பு சுல்தான் பயன்படுத்திய போர்க்கருவிகள், தங்கத்தால் ஆன வாள், துப்பாக்கி உட்பட 8 அரிய பொருட்கள் அவர்கள் வீட்டில் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இந்த குடும்பத்தினர் அந்த கலைப்பொருட்களை ஏலம்விடும் ஆண்டனி கிரிப் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் வழங்கினர். இதைப்பற்றி அறிந்த ‘இந்தியா பிரைட் புராஜக்ட்’ என்ற திருட்டுக் கலைப்பொருட்களைக் மீட்க உதவும் தன்னார்வ அமைப்பு, இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்குத் தெரியப்படுத்தியபோது இந்த ஏலத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதையும் தாண்டி அந்தப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. திப்பு சுல்தான் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் மொத்தம் ஒரு லட்சத்துக்கு ஏழாயிரம் பவுண்டுக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.97 லட்சத்துக்கு 32 ஆயிரம் ஆகும்.

ஏலத்திற்கு வந்த பொருட்களில் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சின்னம் உள்ள வாள் ஒன்று இருந்தது. இது ஹைதர் அலியின் வாளாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.