டந்த வெள்ளிக்கிழமை அன்று நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 49 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனையடுத்து, இதுதொடர்பாக பகிரப்பட்டு வந்த  15 லட்சம் நேரலை வீடியோக்கள் பேஸ்புக் நிறுவனத்தால் 24 மணிநேரத்தில் நீக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளி  தன்னை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘பிரெண்டன் டாரன்ட்’ என்று டுவிட்டரில் அடையாளம் காட்டிக்கொண்டு, 73 பக்க அளவிற்கு தனது நோக்கங்களைப் பதிவிட்டிருந்தான். மேலும் பப்ஜி கேமில் வருவதைப் போலவே டாரன்ட், துப்பாக்கியினால் மக்களைக் கொன்றுகுவித்த வீடியோவினை நேரலையாக வெளியிட்டிருந்தான். இந்த இரக்கமற்றச் செயல் அரங்கேறிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வந்தது. இதைக் கண்ட உலகின் பல்வேறு நாடுகளின் அரசும் மக்களும் கொதித்தெழுந்து, கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இந்த வீடியோவின் எவ்வித பகிர்வும் சட்டத்திற்கு எதிரான மிகப்பெரிய வன்முறை என்றும், அதை பேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார். அதன்படி சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்கள் நீக்கப்பட்டன.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் நியூசிலாந்து செய்தி தொடர்பாளர் மியா கார்லிக் கூறுகையில், “இந்த வீடியோ பகிரப்படுவதைத் தடுக்க  தனியாக ஒரு குழு, சிறந்த தொழில்நுட்பத்துடன் முழுவதும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் 1.5 மில்லியன்(15 லட்சம்) வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  மேலும் பேஸ்புக் ஊழியர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்” என்றார்.