(இமையத்தின் நன்மாறன் கோட்டை சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)

‘நன்மாறன் கோட்டைக் கதை’ மனித வாழ்வில் குவிந்துகிடக்கும் எண்ணற்ற உணர்வுகளையும், விடைதேட முடியாத கேள்விகளையும், வலியும் வஞ்சகமும் நிறைந்த மனநிலைகளையும் நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றன. மனிதர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அனுபவங்கள், உணர்வுகள் அனைத்துமே எளிதில் கடந்து செல்லக்கூடியவை அல்ல. அவை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம், பாதிப்பு, உரையாடல் எல்லாம் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தருகின்றன. இமையம் எழுதிய ஒன்பது சிறுகதைகளையும் வாசிக்கும்போது வாசகனின் மனதில் ஆழமான பாதிப்பையும், கற்றலையும் நிகழ்த்திவிட்டுச் செல்கின்றன. இமையத்தின் எழுத்தில் இருக்கின்ற எளிமை, தெளிவான எண்ண ஓட்டம், சொல் சிக்கனம், பழகுமொழி, உணர்வுகளை சாரம்குறையாமல் பதிவுசெய்யும் பாங்கு, காட்சிப்படுத்தும் ஆற்றல் ஆகியவை வாசகரை எளிதில் வசீகரம் செய்து கதை நடந்த இடத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகின்றன. கதையை வாசித்து முடித்த பிறகும் கதாபாத்திரங்கள் நம்மைத் தொடர்ந்துவந்து தொந்தரவு செய்கிறார்கள்.

சாதியின் பெயரால் வரும் இழிவு, அவமானம், வலி, சாவு, இழப்பு, வெற்றுக் கௌரவம் எப்படி எல்லாத் தளங்களிலும் ஊடுருவிச்செல்கின்றன என்பதை ‘நன்மாறன் கோட்டைக் கதை,’ ‘போலீஸ்’ ஆகிய இரண்டு கதைகள் அப்பட்டமாக எடுத்துச் சொல்கின்றன. பொங்கல் சமயத்தில் நடத்தப்பட்ட மாடுகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் காலனி மாடு வெடிச்சத்தம் கேட்டு, வேகமாக ஓடிப்போய் ஊர் மாடுகளைக் கடந்து எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டது. ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாடு எப்படி ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்கலாம் என்ற வெறியில் ஊருக்குப் பொதுவில் வைத்து மாட்டையும், மாட்டுக்காரனையும் சுளுக்கியால் குத்திக்கொன்ற கதை சாதியின் வன்மத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. வெற்றி, தோல்வி அறியாத மாடும் மாட்டின் உரிமையாளரும் ஏன் அகோரமாகக் கொல்லப்பட வேண்டும்? அத்தகைய மனிதாபிமானமற்ற ஊரில் உயிர் பிழைக்க விரும்பாத மனைவி பிள்ளைகளோடு நம்மால் பயணிக்க முடிந்தது.

காவலர் பணியில் உள்ளவர் தலித் பிணத்தைப் பாடையில் தூக்கிச் சென்றதால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகப் பதறுகிறார். தன்னுடைய கையை அருவெறுப்பாகப் பார்க்கிறார். அந்தப் புகைப்படம் செய்தித்தாளில் வெளியானதால் தன்னுடைய சாதியின் கௌரவம் அழிந்துவிட்டதாகக் கருதுகிறார். அதற்காகத் தன்னுடைய வேலையைக்கூட ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறார் என்ற மனநிலையை ‘போலீஸ்’ கதை விளக்குகிறது. தீட்டு பாடையைத் தொட்டதாலா, சமூகத்தின் எண்ணத்தில் உள்ள அழுக்குச் சிந்தனையை உசுப்பிவிட்டதாலா என்ற கேள்வியை இந்தக் கதை எழுப்புகிறது.

ஆணாதிக்க சமூகத்தில் பிறந்து, அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் காலமெல்லாம் சுமக்கும் ஒரு பெண் உளவியல்ரீதியாகவும், உடல்ரீதியாகவும் சந்திக்கும் சவால்களை எளிதில் எண்ணிவிட முடியாது. அத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு விம்மல்களோடும், விசும்பல்களோடும் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தும் சாதுர்யம் எல்லாப் பெண்களுக்கும் இயல்பாய் அமைந்து விடுவதில்லை. திருமணத்திற்காக வாங்கிவைத்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டது. அதை இரண்டு மூன்று நாட்களுக்குள் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற பதட்டத்தில் கொளஞ்சியப்பர் என்ற தெய்வத்திற்கு ‘பிராது மனு’ எழுதுகிறார். கடைசிவரை தங்கச் சங்கிலி கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத அவலத்தில் அவளுடைய உயிர் செத்துசெத்துப் பிழைக்கிறது.

பேருந்தில் பயணித்து வேலைக்குச் செல்லும் பெண்ணுக்குத் திடீரென்று எதிர்பாராத நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால், எத்தகைய சங்கடங்களை சந்திப்பார் என்பதை ‘ஆலடி பஸ்’ என்ற கதை விவரிக்கிறது. தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை சக பெண்களிடம் சொல்ல முடியாமலும், மற்றவர்கள் தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என்ற எரிச்சலைக் கோபமாகவும் வெளிப்படுத்தும் பெண்ணின் இயல்பை அருமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

திருமணம் முடித்த ஆண், தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளையை மறந்துவிட்டுக் குடிப்பதும், சின்ன வீடு வைத்துக்கொள்வதும் நம்முடைய சமூகத்தில் இயல்பாக நடக்கிறது. அதைக் கேள்வி கேட்டால் அடியும், உதையும், அவமானமும் மனைவிக்குப் பரிசாகக் கிடைக்கின்றன. எவ்வளவு நாளைக்குத்தான் மனைவி புருசனின் போக்கிரித்தனத்தைப் பொறுத்துக்கொள்வாள். அவனுக்கு சரியான பாடம் புகட்ட விரும்பி, காவல் நிலையத்தில் உறவினர்கள் சூழ்ந்து நிற்க, “இந்தப் புள்ள உனக்குப் பொறக்கல” என்று அடித்துச் சொல்லிவிடுகிறார். ஆணின் ஆதிக்கத்தையும், வக்கிரத்தையும் அங்கீகரித்த சமூகத்திற்குப் பாடம் புகட்டவே இவன் ஆண்மையற்றவன் என்ற பட்டத்தைச் சூட்டிப் பழிவாங்குகிறார். ஒரு பெண்ணின் கோபம் தலைக்குமேல் ஏறும்போது எதுவும் செய்வாள் என்பதற்கு ‘தலைக்கடன்’ என்ற கதை ஒரு நல்ல உதாரணம்.

அன்பு, காதல், காமம் எல்லாம் ஆண்-ஜ்பெண் உறவில் இயல்பாய் வெளிப்படும் உணர்வுகள். தன்னுடைய அந்தரங்கமான உணர்வுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள இந்த உலகில் யாராவது ஒரு நபர் உண்டா என்றுதான் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஏங்குகிறார்கள். அப்படி ஒரு நபர் இயல்பாய் அமையும்போது, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ஒழுங்குகளையும் விதிமுறைகளையும் மீறுவதற்குத் தயங்குவதில்லை. அந்தஸ்து, கௌரவம் கடந்து உறவைக் கொண்டாடத் துடிக்கும். ஆணின் மனதை இயல்பாய் எடுத்துரைக்கிறது. ‘பணியாரக்காரம்மா’ மற்றும் ‘சாந்தா’ என்ற இரண்டு கதைகள். தன்னுடைய மனைவியோடு எந்த உறவிலும் ஈடுபடாத செட்டியார், பணக்காரன் என்ற கௌரவத்தையும் கடந்து தெருவில் பணியாரம் சுட்டு விற்கும் பெண்ணைக் காதலிக்கிறார். அவளோடு நெருக்கமாக இருக்க அவளின் வீட்டிற்கே வருகிறார். தன்னை நினைத்து மனைவியை மறந்த செட்டியாருக்குத் தன்னை முழுமையாக வழங்கவும் தயராக இருக்கிறாள். கடைசியில் அவன் கொடுத்த பணத்தையும் நகையையும் நிராகரித்து, அன்பு இதையெல்லாம் கடந்தது என்று நிரூபிக்கிறாள். பணியாரக்காரம்மா தன்னை முழுமையாக நம்பி சித்தாள் வேலைக்கு அனுப்பும் கணவனுக்கு விசுவாசமாய் இருக்கிறாள் என்பதை அழகாக விளக்குகிறது ‘சாந்தா’ என்ற கதை. ஒரு வீட்டு உரிமையாளர் உடல் இச்சைக்காக அன்றி வேறு எதற்காக ஒரு சாதாரண சித்தாள் வீட்டிற்கே வர முடியும்? தலையில் அடிபட்டதற்கு மருத்துவச் செலவு செய்ய பணம் கொடுக்க நினைத்தாலும் அதுவல்ல நோக்கம் என்பதை சாந்தா சரியாகப் புரிந்துகொண்டு, அவனுக்குப் பாடம் கற்பிக்கிறாள். “ஒரு பொம்பள வயித்த கழுவணுமின்னா அவளோட உடம்பக் காட்டித்தான் சம்பாதிக்கணுமா?” என்று சாந்தா சொன்னது அவனுக்குக் கன்னத்தில் அறைந்ததுபோல இருந்தது. இன்னொருவனின் மனைவிமீது ஆசைப்படும் எல்லா ஆண்களின்மீதும் வீசி எறியப்பட்ட கல்தான் அவளின் கூற்று.

‘நம்மாளு’, ‘கட்சிக்காரன்’ இரண்டு கதைகளும் அரசியல் தளத்தில் நடைபெறும் உண்மை எதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றன. கட்சி, பதவி, அதிகாரம் என்று வந்தால் உறவினரும், நண்பரும், ஏன் ஒரே சாதிக்காரன்கூட விரோதியாக மாறிவிடும் அவலம் அரசியலில் மட்டுமே உள்ளது என்பதை விளக்குகிறது ‘நம்மாளு’ கதை. ஒரே கட்சியில் போட்டியிடும் சக தோழனைத் தோற்கடிக்கத் தொண்டர்களை அழைத்துப் பேரம் பேசும் சூழ்ச்சி அந்தக் கதையில் இயல்பாய் வெளிப்படுகிறது. துரோகம் கட்சி அரசியலின் அடுத்த முகம் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

பணம் ஒன்று மட்டுமே இன்றைக்கு அரசியல் செல்வாக்கைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி என்பதை எடுத்துச் சொல்கிறது ‘கட்சிக்காரன்’ என்ற கதை. கட்சிக்காக காலமெல்லாம் உழைத்தாலும் அதிகாரப் போட்டி என்று வரும்போது பணம் உள்ளவனே எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கும் இன்றைய எதார்த்த நிலையை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. ஏமாற்றம், வஞ்சகம், நூதனமான பழிவாங்குதல் எல்லாம் அரசியலில் நடைமுறையாகிப் போய்விட்டன. பணமுள்ளவன் மட்டுமே பிழைக்க முடியும். பணமில்லாதவன் உழைக்க மட்டுமே செய்ய வேண்டும் என்பதை நிரூபிக்கிறது இந்தக் கதை.

ஒட்டுமொத்தமாக இமையத்தின் இந்த ஒன்பது கதைகளும் சமகாலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன. தான்வாழும் சமூகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதை அழுத்தமான காட்சி மொழியில் பதிவுசெய்திருக்கிறார். கதைகளில் வரும் மாந்தர்கள் சமூகத்தில் உலாவரும் மனிதர்களின் இயல்பான உணர்வுகளை, ஆசைகளை, கனவுகளை, சபலங்களை, வக்கிரமும் வன்மமும் நிறைந்த மனநிலைகளை வெளிப்படுத்தும் வகையில் பயணிக்கிறார்கள். எங்கும் எதிலும் கதையாசிரியர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களையும் எண்ணங்களையும் புகுத்தவில்லை. வாசகன் எந்தக் கருத்தையும் எடுத்துக்கொள்ளவும், விட்டுவிடவும் முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அது இமையத்தின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. ‘நன்மாறன் கோட்டைக் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு எல்லோரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நல்ல நூல்.

நன்மாறன் கோட்டைக்கதை
விலை ரூ.225, க்ரியா வெளியீடு
புதிய எண். 2 பழைய எண். 25 முதல் மாடி, 17ஆவது இ செயின்ட், காமராஜ் நகர், திருவன்மியூர்,
சென்னை – 600041, தொ: 044 4202 0283