கொழந்தையப் பாருக்கா!

அப்பிடியே அச்சு அசலு

மோடியாட்டம் செவப்பு,

அவராட்டமே மூக்கு

அந்த ஒதடுகள சித்த பாருங்களேன்

அடே… சாமி! பொன்னாயா

பையன் நாளைக்கி பிரதமராத்தான்

வருவாம் பாரேன்!

இன்னிக்கே கதிருவேல… சொன்னான்னு

எழுதி வச்சுக்கோ பொன்னாயா!

ஐநூறு ரூவா நோட்டை எப்பிடி

வவுக்குனு புடுங்கி கைக்குள்ள

சுருட்டி வச்சிக்கிட்டாம் பாருக்கா!

சுற்றிலும் நின்றிருந்த உள்ளூர் பொம்பளைகள் தாவாங்கட்டைக்கு கையைக் கொண்டு சென்று வைத்துக் கொண்டார்கள். ‘அடப் பாப்புருக்குப் பொறந்தவனே! பொன்னாயா பையனைப் பாக்க வந்துட்டு இப்பிடியா ஒரு சொல்லு சொல்லி பணங் குடுப்பே!’ என்றே நினைத்தார்கள் அவர்கள். ‘ஐநூறு ரூவா நோட்டைக் குடுத்துப்போட்டு பேச்சைப் பாரு தண்டுவனுக்கு! தண்ணியப் போட்டுட்டு வந்துட்டானோ? இந்தப் பேரெழவு புடுச்சவன் தண்ணியப் போட்டாலும் சுத்தமாத்தான் பேசுவானே! இன்னிக்கி இவுனுக்கு என்ன வந்துச்சு? நோட்டுக புழக்காட்டத்தப் பார்த்தா சம்பளம் வாங்கீட்டானாட்ட இருக்குது மில்லுல இன்னிக்கி!’

கதிருவேலனோ ஐநூறு ரூவாயைக் குழந்தை கையில் கொடுத்த பிறகு மற்றவர்கள் குழந்தையைப் பார்க்க வழிவிட்டு வீட்டின் ஓரமாய்ச் சென்று நின்று கொண்டு எல்லோரையும் பார்த்துப் புன்னகைத்தான். அந்தப் புன்னகைதான் அவனை தண்ணிப் போட்டவனாகக் காட்டிக் கொடுத்தது.

கதிருவேலனுக்கு இன்று சம்பள தினம்தான். மதியமே மில்லில் இவன் வேலையில் இருந்தபோது பொன்னாயாவுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவல் அவனுக்கு அலைபேசி வழியாகக் கிடைத்துவிட்டது. அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த நன்னாள் இதுதானே! இதுவெல்லாம் பழைய பகை. பகையாக இவன்தான் நினைத்துக் கொண்டிருந்தான் இத்தனை காலம்வரை.

பொன்னாயாவின் அம்மா கண்ணாத்தாதான் எல்லாவற்றிற்கும் காரணம். கதிருவேலன் உள்ளூரில் துணி வெளுக்கும் குடும்பத்தில் பிறந்தவன். அவன் பிறப்புக்கு வந்திருந்த கண்ணாத்தா வாழ்த்திய வாழ்த்துதான் அப்போது உள்ளூரில் பிரசித்தம். இவன் பெரியவனாகியும் அதையே சொல்லிச் சொல்லி சிரித்தார்கள். அது அவன் மனதில் வேர்விட்டு பூதாகராமாய் வளர்ந்துவிட்டது. ‘பொக்கவாயி சிரிப்பப் பாரு ராசாவுக்கு! அப்பிடியே கலெக்டராட்டமே சிரிக்கான்!’ இதுதான் கண்ணாத்தா இவன் பிறந்தபோது சொன்ன வார்த்தை. இவன் உள்ளூரில் சிரிக்கும் சமயமெல்லாம் ‘கலெக்டர் சிரிச்சுட்டாருடோய்!’ என்றே நக்கலும் நையாண்டியுமாகப் போயிற்று!

கதிருவேலன் படிப்பும் ஒன்பதாவதோட நின்று போனதற்கு அவன் தந்தையார் இறந்துபோனது காரணமாயிற்று. வீட்டுக்கு ஒத்தைப் பிள்ளை கதிருவேலன். அம்மா துணி வெளுத்துப் பொட்டி போட்டு தேய்த்துக் கொடுத்து சம்பாதித்து இவனை படிக்கவைக்க இயலவில்லை. அம்மாவுக்கு சிலகாலம் ஒத்தாசையாக இருந்தான். கலெக்டர் துணி வெளுக்க வந்துவிட்டதாய் ஊர் பேசிற்று. கண்ணாத்தா இறந்த அன்றுதான் கதிருவேலன் கோட்டர் அடிக்க கற்றுக் கொண்டான். அன்று அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் முக்குளித்தான். அவனது மிக நீண்டகால பகையாளி இறைவனடி சேர்ந்துவிட்டாள்.

அம்மாவும் போன பிறகு கதிருவேலன் அனாதையானான். துணி வெளுக்கும் வேலையை விட்டொழித்துவிட்டு நூல் மில்லுக்கு சென்று சேர்ந்து கொண்டான். அவனுக்கென்று ஒரு வீடு மட்டும் அவன் படுத்துறங்கிச் செல்ல உள்ளூரில் இருந்தது. உள்ளூர் குடிகார ஆட்களுக்கெல்லாம் மிக நெருங்கிய நட்புடையவனானான் கதிருவேலன். அவனது உள்ளூர இருந்த பகையை இன்று கண்ணாத்தாவின் பெண் பொன்னாயாவுக்கு பிறந்த பையனை வாழ்த்தியதோடு முடிவுக்கு வந்தது. நிம்மதியாய் கூட்டத்தினரைப் பார்த்து மீண்டுமொரு புன்னகையைத் தவழவிட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளி வந்தான் கதிருவேலன்.

இதைப்பற்றி அவனது குடிகார நண்பர்களுக்கு எதுவும் தெரியாது. கதிருவேலனுக்கு அதைத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கலெக்டர் கதிருவேலன் என்கிற பேச்சே உள்ளூரில் இப்போது அழிந்து போயிருந்தது. பொன்னாயாவுக்கே அது தெரியுமோ என்னவோ! ஆனாலும் தன் வாழ்வில் இனிமேல் தனக்கு எல்லாமும் நல்லதாகவே நடக்குமென நம்பி சாலையில் நடையிட்டான் கதிருவேலன். மாலை நேரமாகையால் சாலையில் வாகனங்களின் அணிவகுப்பு அதிகமாயிருந்தது. இவன் சிறுவனாய் இருந்தபோது இந்தச் சாலையில் இத்தனை வாகனங்களைக் கண்டதேயில்லை.

மேற்கே குருடி மலையிலிருந்து மழை பெய்யுங்காலத்தில் தண்ணீர் வரும் பள்ளம் இன்று வீடுகளாய் நிரம்பியிருந்தது. நாளையோ அல்லது சில வருடங்கள் கழித்தோ ஒரு பெருமழை கொட்டினால்  ‘லபோ லபோ’வென மக்கள் வீடுகளை இழந்து நெஞ்சில் அடித்துக் கொள்வதை நியூஸ் சேனல்களில் பார்க்கலாம். காலமாற்றத்தில் இவன் துணிமணிகளைத் துவைக்கும் பாறையைக் காணவில்லை. அந்த இடத்தில் ஒரு கம்பெனி முளைத்திருந்தது. பாறை இருக்குமிடத்தில் இளநீலவர்ண உடையில் காவலாளி நின்றிருந்தார்.

சாலையோரத்தில் இருபுறமும் நின்றிருந்த பெரிய பெரிய புளியமரங்கள் ஒன்றுகூட இல்லை. இருவழிப் பாதையாக கோவையிலிருந்து பெரியநாய்க்கன் பாளையம்வரை சாலை படர்ந்து செல்கிறது. இருவழியிலும் வாகனங்கள் போவதும் வருவதுமாக இருக்கின்றன எந்த நேரமும். வெளியூர் ஆட்கள் உள்ளூரில் குவிந்து கிடக்கிறார்கள். யாரையும் இவனுக்கு அடையாளம் தெரியவில்லை. உள்ளூர் ஆட்கள் ஆங்காங்கு கடைவீதிகளில் தட்டுப்படுகிறார்கள்.

சாலையில் இவன் நடந்து சென்று கொண்டிருக்க இவனை ஒட்டினாற்போல் கணேசனின் பைக் வந்து நின்றது.

“எங்கடா வெக்குடு வெக்குடுன்னு போயிட்டு இருக்கே? சரக்கு கடைக்கிதானே!” என்ற கணேசனுக்கு பதிலேதும் சொல்லாமல் அவன் வண்டியில் தொற்றிக் கொண்டான்.

“இன்னிக்கி சம்பளம் வாங்கிட்டியா? அப்ப இன்னிக்கி உன்னோட சப்ளைதான். காடைக்குஞ்சு கறி சாப்பிடுவோம்! எனக்கு ஒரு பீரு மட்டும் போதும். முருகேசனுக்கு ஒரு போனை போட்டு துடியலூர் கடைக்கி வரச் சொல்லிடலாமா?”

“பேசாம வண்டிய நேராப் பாத்து ஓட்டு மாப்ள! போயி கடையில உக்காந்துட்டு அவனை வரச் சொல்லுவோம்!” என்றான் கதிருவேலன்.

சாலையோரமெங்கும் காம்ப்ளெக்ஸ்கள் முளைத்து நின்றிருப்பது இந்த உலகம் படுவேகமாக எங்கோ வளர்ந்து சென்று கொண்டே இருக்கிறது, என்பதையே கதிருவேலனுக்கு சொல்லிக் கொண்டிருந்தது. உலக வேகத்துக்கு இணையாக இவனால் எதுவும் செய்ய முடியாதது வேதனையாயிருந்தது. வேகத்துக்கு தண்ணி மட்டுமே போட முடிகிறது என்பதே இப்போதைக்கு தீர்வாய் மாறிப் போயிற்று.

அரசாங்கம் எல்லோரையும் தண்ணி போட வேண்டாம் என்கிறது. ஆனால் தண்ணிக்கடையை திறந்து வைத்திருக்கிறது. சிகரெட் குடிக்காதே, பான்பராக் போடாதே, ஹான்ஸ் போடாதே என்று சொல்கிறது. ஆனால் கடைகளில் அவற்றை விற்பதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த விசித்திரம் மட்டும் புரியாதவனாகவே வாழ்கிறான் கதிருவேலன். அவனுக்கென்று ஒரு துணை கிட்டிவிட்டால் அமைதியடைந்து வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வான் என பலர் நினைக்கிறார்கள். நினைப்பதற்கென்ன காசா பணமா? இதை வாசிக்கும் நீங்கள் கூட நினைத்துக் கொள்ளுங்கள்! இந்த வாலிபன் ஏன் தன்னைக் குடியால் மாய்த்துக் கொள்கிறான்? என்றும், வீணாகப் போய்விடுவானே! என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். கவலைப்படுவதற்கு நேரமிருந்தால் அதையும் செய்யுங்கள் சில நிமிடம்.

கணேசன் வழக்கமாய் நிறுத்தும் மரத்தடியில் தன் டூவீலரை நிறுத்தி சாவியை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். “வணக்கம் சாரே!” காதில் செருகியிருந்த பால்பாய்ண்ட் பேனாவை கையில் எடுத்துக்கொண்ட ஒருவர் பேப்பரில் இவர்கள் சொல்லும் ஆர்டரை எழுதிக்கொள்ள ஃபாரின் வாயிலிலேயே காத்திருந்தார். கணேசன் ஆர்டர் சொல்ல கதிருவேலன் ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை அவர் கையில் கொடுத்துவிட்டு மாடிப்படிகளில் ஏறினான். கீழே கசமுசாவென கூட்டமாயிருக்க இவர்கள் வழக்கமாய் மேலே மாடியில் சென்றுதான் அமருவார்கள்.

முருகேசனுக்கு கணேசனே டேபிளில் அமர்ந்ததும் போனைப் போட்டுச் சொல்லிவிட்டான். சில நிமிடங்கள் பேசியதும் போனை பாக்கெட்டில் வைத்தான்.

“முருகேசன் என்ன சொல்றான்?” என்றான் கதிருவேலன்.

“மதியமே ரெண்டு பீரு குடிச்சிட்டானாம். யாரோ அவன் மாமன் பையன் ஈரோட்டுல இருந்து வந்திருந்தானாம்.”

“வர்றானா இல்லையா?”

“வர்றேனுட்டான். நாம ஆரம்பிப்போம்.” இவர்கள் முதல் ரவுண்டை முடித்த சமயத்தில் முருகேசன் அவன் மாமன் பையனோடு மாடிக்கு வந்துவிட்டான். அவனை இவர்களுக்கு அறிமுகப்படுத்தினான் முருகேசன். அவன் பெயர் குணசேகராம். ஊதுகாமாலை வந்ததுபோல கன்னம் இரண்டும் உப்பிப் போயிருந்தது அவனுக்கு.

“ஈரோட்டுல இருந்து பஸ்சுல படியில தொங்கீட்டு வந்தீங்களா இல்ல பின்னாடி ஏணி இருக்குமே அதப் பிடிச்சு நின்னுட்டே வந்தீங்களா?” என்றான் கதிருவேலன். குணசேகரனுக்கு அது குழப்பமாயிருந்தது. சிரிக்காமல் கேட்கிறானே மனுசன்!

“இல்ல பஸ்ல உள்ளார உக்கோந்துட்டுதான் வந்தனுங்க!”

“கல்யாணம் ஆயிடுச்சா உங்களுக்கு?” என்றான் கதிருவேலன் அவனிடம்.

“ஆயிடுச்சுங்க. ஒரு வருசமாச்சி!”

“விதவையைக் கல்யாணம் பண்டுனீங்களா? இல்ல, இழுத்துட்டு ஓடி காதல் கல்யாணம் பண்டுனீங்களா?”

குடித்துக் கொண்டிருந்த முருகேசன் “உட்றா மாப்ள அவனை! ஏம் போட்டு வறுத்து எடுக்குறே?” என்றான்.

“இல்ல நண்பரைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்னுதான். குணசேகரு, அவனுங்க குடிக்கட்டும். நாம மெதுவா குடிப்பம். சொல்லுங்க நீங்க, ஈரோட்டுல தண்ணி வசதியெல்லாம் எப்படி? உங்க மனைவி பைப்புல புடிக்கிறாங்களா, இல்ல காவேரி ஆத்துக்கு போயி மோந்துட்டு வர்றாங்களா? இல்ல, தெரிஞ்சிக்கறதுக்குத்தான்!”

“மாப்ள நீ கம்முன்னு குடிக்கிறியா இல்ல என்ன கேக்குறே இப்போ? வந்த நண்பரைப் போட்டு வாட்டி எடுத்துட்டு!”

“அடப் பேசுறக்கு உடுங்கடா சித்தெ! நீங்க குடிங்கடா! அப்புறம் குணசேகரு முதலிரவுல அவங்க மொதல்ல கையை வச்சாங்களா? இல்ல, நீங்க மொதல்ல கையை வச்சீங்களா?”

“இதென்ன இப்படி பேசிட்டு இருக்காரு இவரு?” குணசேகர் முருகேசனிடம் எடுத்து இயம்பினான்.

“அவன் அப்பிடித்தான் கேப்பான். மனசுல ஒன்னும் தப்பா நெனச்சுட்டு கேக்க மாட்டான். அவன் பழக்கமே அதான். சைக்கிள் ஓட்டத் தெரியுமான்னு அவனை நீ கேளு!” என்ற முருகேசன் பீர் பாட்டிலை உயர்த்தி அன்னாந்து ரெண்டு மடக்கு குடித்து டேபிளில் வைத்தான். காடைக் குஞ்சின் தொடைப்பகுதியைத் தேடி எடுத்து வாயிற்குள் தள்ளினான்.

“கதிருவேலன் உங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா?” என்றான் குணசேகரன்.

“எனக்கு சைக்கிளு, காரு, பைக்கு ஒன்னும் ஓட்டத் தெரியாது. பஸ்சுல ஏறிப் போவேன் வருவேன். என்கிட்ட சைக்கிள் இருந்தாத்தானே ஓட்டுறதுக்கு? என்கிட்டத்தான் ஒன்னுமில்லையே! இப்படி நண்பர்கள் வண்டி எடுத்தாங்கன்னா உக்கோந்துட்டு ஊருல போயி இறங்கிக்குவேன்!”

“அதிசியமா இருக்குது உங்களோட! இந்தக் காலத்துல பைக்கி ஓட்டத் தெரியாதுங்கறீங்க?”

“ஆமா! அதிசியந்தான் எனக்குமே. சரி ஈரோட்டுல இருந்து வந்திருக்கீங்களே உங்க சம்சாரத்தோட சண்டெ கட்டீட்டு வந்துட்டீங்களா? இல்ல சண்டை கட்டாம சும்மாநாச்சிக்கும் வந்துட்டீங்களா?”

“ஏனுங்க ஊருல இருந்து வந்தா சண்டையாத்தான் இருக்கணுமா?”

“தெரியாமத்தான கேக்குறேன் நானு! பொண்டாட்டிய உட்டுப்போட்டு தனியா வந்தா பின்ன என்ன கேப்பாங்க ஃபார்ல உக்கோந்துட்டு?”

*

அவர்கள் பார் மூடப்படும் நேரத்தில் வெளியே தள்ளாடிக் கொண்டு வந்தார்கள். வழக்கமாக பத்து மணிக்கு மேல்தான் அங்கிருந்து அவர்கள் கிளம்புவார்கள். அதேபடித்தான் இன்றும் ஆயிற்று.

“சரி மாப்ள, நான் குணசேகரனோட கிளம்புறேன். நீங்க பார்த்துப் போங்க! இன்னிக்கி என்ன உனக்கு தள்ளாட்டம் எச்சா இருக்குது கணேசா? பேசாம வண்டிய பார்ல தள்ளீட்டு ஆட்டோல போயிக்கறீங்களா? சுந்தரண்ணனைக் கூப்பிடவா?”

“அதெல்லாம் வேண்டாம் மாப்ள! நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு”

முருகேசன் விடைபெற்றுக் கொண்டு தன் டூவீலரில் குணசேகரனோடு கிளம்பிப் போனான். கணேசன் வண்டியை சாலைக்கு நகர்த்தி ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். வண்டி உறுமியதும் கதிருவேலன் தாண்டுக்கால் போட்டு அமர்ந்து கொண்டான். கீழே விழுவேன் இப்போ என்று கிளம்பிய டூவீலர் சற்று தெம்பாகி சாலையில் பயணிக்கத் துவங்கியது.

துடியலூரிலிருந்து வெளிவந்த வண்டி வடமதுரை தாண்டியதும் வேகமெடுத்தது. காலனி கேட்டை சடக்கை போடும் நிமிடத்தில் புயலாய்க் கடந்த வண்டி தொப்பம்பட்டி பிரிவு அருகே அனத்திக் கொண்டு மெதுவாக மேற்கே தொப்பம்பட்டி நோக்கித் திரும்பியதும் ‘வர்ர்ர்’ரென வேகமெடுத்தது. இரவு பதினொன்று என்பதால் சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லாமலிருந்தது. இரண்டாவது முக்கு திரும்புகையில் வண்டி சாலையில் இழுத்துக் கொண்டு போய் டொமீரென அடங்கியது!

கதிருவேலன் சாலையில் நீச்சலடிப்பவன்போல விழுந்தான். பின் உருண்டு எழுந்தவன் வண்டியைத் தேடினான். அது சாலையின் மறுபுறம் போய் படுத்திருந்தது. வண்டியிலிருந்து எந்த சப்தமும் வரவில்லை. தன் பின்பாகத்தைக் கைகளால் தட்டி துடைத்துக்கொண்டு சாலையில் தொப்பம்பட்டி நோக்கி நடக்கத் துவங்கினான் கதிருவேலன்.

விடிகாலையில் முருகேசன் அலைபேசியில் கதிருவேலனை அழைத்தான். குளித்து முடித்து தலையைத் துவட்டிக் கொண்டிருந்த கதிருவேலன் மில்லுக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தான்.

“சொல்றா மாப்ளே! வீட்டுக்கு நேத்து பத்திரமா போயிட்டியா?” என்றான்.

“நீயும் கணேசனும்தான ஃபார்ல இருந்து கிளம்பிப் போனீங்க?”

“ஏண்டா உனக்கென்ன தலைகண்ட போதையா நேத்து? இப்பிடிக் கேக்குறே? நீயும் அந்த ஈரோட்டு தம்பியும் போன பொறவுதானடா நானும் கணேசனும் கிளம்பினோம்.”

“அப்ப சரி, தொப்பம்பட்டி பிரிவுல இருந்து உள்ளார போனதீம் ரெண்டு பேரும் வண்டில இருந்து உழுந்துட்டீங்களா?”

“யாரு? நானும் கணேசனுமா?”

“ஆமாண்டா மண்டையா! இப்ப வேணுகோபால் ஆஸ்பத்திரில கட்டுப் போட்டுட்டு பெட்டுல கிடக்காண்டா கணேசன்! தாயோலி என்னதாண்டா பண்ணினே நேத்து நீயி?”

“இதென்ன அழும்பா இருக்குது உன்னோட! நான் ஊட்டுல வந்து தூங்கி எந்திரிச்சேன். அவன் ரோட்டுல தூங்கினான். இப்ப எதுக்கு ஆஸ்பத்திரில போயி கிடக்கான் கணேசன்? அவன் வண்டி எங்கே?” என்று கதிருவேலன் கேட்டபோது முருகேசன் போனை கட் செய்திருந்தான்.