நிறைய எழுதுவது பற்றிப் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. அதிலும் கவிதையில் செயல்படுகிறவர்கள் நிறைய எழுதிக் குவிக்கக் கூடாது என்ற மனோபாவம் இங்கே உருவாக்கிப் பரப்பப்படுகின்றன. இலக்கிய வகைமைக்குள் கவிதை உயர்வானது என நினைப்பதும், அதில் செயல்படுபவர்களின் படைப்பாற்றல் ஒருவிதமான வரம் என்று நினைப்பதும் அந்த மனோபாவத்தின் பின்னே இருப்பதாகச் சொல்லலாம். தனது தன்னிலையின் இருப்பை-மனப்போக்கைச் சூழலோடு இணைத்துப் பயணிக்க வைக்கும் ஒருவருக்குத் தான் தேர்வுசெய்து இயங்கும் இலக்கிய வகைமையின் வழியாக வெளிப்படுவதே இயல்பானது. தனது மனதைக் கவிதையின் கட்டமைப்பான பாங்கில் வைத்திருக்கும் ஒருவரால் தொடர்ச்சியாக எல்லாவற்றையும் கவிதை வடிவத்திலேயே சொல்ல முடியும். தமிழில் அதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அந்த எடுத்துக்காட்டுகளைப் பெரும்பாலும் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிலேயே காட்ட முடியும். நம் காலத்தில் அப்படி வெளிப்பட்டுக்கொண்டே இருப்பவர் கவி.மனுஷ்ய புத்திரன்.

மரபு இலக்கியப் பரப்பில் யாப்பில் எழுதித் தன் காலத்தின் பலவற்றைப் பேசிய ஒன்றிரண்டு பெயர்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடியும். உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஒரு எடுத்துக்காட்டு. அவருக்கு முன்னால் குமரகுருபரர். இவர்கள் இருவருமே தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களின் இலக்கணங்களை உள்வாங்கி அவற்றின் ஏதாவதொரு வடிவில் எழுதியவர்கள். அங்கிருந்து உடைத்துக் கொண்டு வெளியே வந்தவன் பாரதி. அதன் காரணமாகவே நவீனத்தமிழ் இலக்கியம் பாரதியில் தொடங்குவதாகச் சொல்கிறோம்.

யாப்பு வழியான வெளிப்பாட்டு முறையிலிருந்து விடுபட்ட காலம், தமிழ் எழுத்துப் பரப்புக்கு விடுதலை கிடைத்த காலம். அதுவரை ஒருவரை ஏதாவதொன்றின் – ஒரு இலக்கிய வகைமையின் – வழியாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால் நவீனத்துவம் அதனை அடியோடு மாற்றியது. எமக்குத் தொழில் கவிதை எனப் பிரகடனம் செய்த பாரதிகூடக் கவிதைக்குள் மட்டுமே நின்றுவிடவில்லை. பத்திரிகைப் பணி காரணமாக ஏராளமான கட்டுரைகளையும் துணுக்குகளையும் எழுதிக் குவித்திருக்கிறார். அதிலிருந்தும் விலகிப் புனைகதை வடிவங்களான சிறுகதைகளையும் சந்திரிகையின் கதை போன்ற நெடுங்கதையையும் முயன்று பார்த்திருக்கிறார். உரைநடை வெளிப்பாட்டுக் கருவியாக ஆனபின்பு எழுத்தாளர்கள் பலப்பலவாய் வெளிப்படுவதையே விரும்புகிறார்கள்.

பெரும்பாலும் பதின்வயதுகளில் எழுதத் தொடங்கும்போது கவிதையில் தொடங்கிப் புனைகதை, கட்டுரை, விமரிசனம் என நகர்ந்தவர்களே தமிழ் இலக்கியத்தில் சாதித்தவர்களாக – ஆளுமைகளாக அறியப்படுகின்றார்கள். இப்போதைய தமிழ் எழுத்துப் பரப்பில் ஒருவரை ஒரேயொரு வகைமையில் மட்டுமே செயல்பட்டவர் என அடையாளப்படுத்த முடியாத அளவுக்கு ஒருவரது அடையாளங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. கவிதை, கதை, நாடகம், கட்டுரை என எழுதுவதற்கான வகைமையைத் தேர்வுசெய்துகொள்வது திட்டமிட்டும் நடக்கலாம்; திட்டமிடாமலும் நடக்கலாம். தொடர்ச்சியாக ஒருவர் அவ்வகைமைக்குள் இயங்குவதன் மூலம் தன்னைக் கவியாகவோ, கதை எழுதுபவராகவோ, நாடகாசிரியராகவோ, கட்டுரையாளராகவோ ஏதாவதொரு வகைமைக்குள் தன்னை நிறுவிக்கொள்ள முடியும். ஒருவர் தேவை கருதியோ, சூழல் தரும் நெருக்கடியாலோ மேலும் முயன்று இன்னொன்றுக்குள்ளும் தன்னை நிலைநிறுத்தும் வேலைகளைச் செய்துகொள்கிறார்.

நிகழ்காலத்தில் தமிழின் பெருங்கவிஞன் மனுஷ்ய புத்திரன். எப்போதும் ஆண்டுக்குச் சில நூறு கவிதைகள் எழுதும் மனுஷ்ய புத்திரன் பெரும்பாலும் பெரும்பெரும் தொகுதிகளாகவே வெளியிட்டுக் கொண்டிருந்தார். 400 கவிதைகள், 500 கவிதைகள் கொண்ட அப்பெரும் தொகுதிகளை வாசித்து ஒரு விமரிசனக் குறிப்பு எழுத முடியாமல் தவித்ததுண்டு. அவரிடமே சொல்லியிருக்கிறேன். அவருடைய பெருந்தொகுப்புகளை மட்டுமல்ல, சில பத்துக் கவிதைகள் கொண்ட ஒருவரின் கவிதைத் தொகுதிகளை வாசிக்கும்போதும் இந்த நிலைமை ஏற்படுவதுண்டு. எப்போதும் பிரதியாக்க முறைமை, அதற்கான தூண்டுதல், அதனைத் தனது வாழ்வியல் மற்றும் அழகியல் வெளிப்பாடாக மாற்றும் திறன் பற்றிப் பேசும் கவிதை விமர்சகர் ஒருவர், தமிழில் வரும் கவிதைத் தொகுதிகளைப் பற்றிப் பேசுவதில் இந்தச் சிக்கலை எதிர்கொள்ளாமல் தப்பிக்க முடியாது.

ஓராண்டில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை நூறுகளின் பெருக்கமாக இருந்ததை இந்த ஆண்டு (2019) ஆயிரங்களின் பெருக்கமாக மாற்றியிருக்கிறார். அதனைத் தொகுத்து வெளியிடும்போது வாசகர்களுக்கு உதவும் சிறு முயற்சியையும் செய்திருக்கிறார். வரவேற்கத் தக்க முயற்சி அது. 2019 ஆம் ஆண்டில் எழுதிய 2000க்கும் அதிகமான கவிதைகளைச் சில பொருண்மை அடிப்படையில் வகைப்படுத்திப் பதினோரு தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார்.

  1. இரவுக்கு கைகள் இல்லை (கையறுநிலையின் புத்தகம்)
  2. ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)
  3. சினேகிதியின் காதலர்கள் (நம் காதல்களின் புத்தகம்)
  4. தரைக்கு வராத இலைகள் (தனிமையின் புத்தகம்)
  5. தீண்டி விலகிய கணம் (அன்பின் புத்தகம்)
  6. தேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)
  7. மனத்தில் அமரும் கிளி (காட்சிப்பிழையின் புத்தகம்)
  8. மர்ம முத்தம் (விசித்திர காலத்தின் புத்தகம்)
  9. மௌனப் பனி( மரணத்தின் புத்தகம்)
  10. வாதையின் கதை (சிகிச்சையின் புத்தகம்)
  11. வைரல் யானை (காலத்தின் புத்தகம்)

பொருண்மையைச் சிறுதலைப்பாக்கித் தொகுதியின் தலைப்பைப் பெரிதாக்கிப் பதிப்பித்துள்ள 11 தொகுதிகள் ஓராண்டில் எழுதப்பட்டவை என்பது ஒரு கவியின் பெரும்சாதனை.இந்த வகைப்பாடு செய்ய வேண்டிய வேலை. வாசிப்பவர்களுக்கும் பேச நினைப்பவர்களுக்கும் பேரளவு உதவும். இத்தொகுதிகளில் பெரிதாகவும் அடைப்புக்குறிக்குள் சிறிதாகவும் அச்சிடப்பெற்றுள்ள சொற்கள் கவிதை வாசகர்களுக்கு ஒரு திறவுகோலாக இருக்கின்றன. சில தலைப்புகளில் கொஞ்சம் மர்மங்களும் ரகசியங்களும் பொத்தி வைக்கப்பட்டிருந்ததால் பல்வேறு வகைப்பட்ட பூட்டுகளைத் திறக்கும் அனுபவத்திற்கு இட்டுச் செல்கின்றன. யானையைத் தடவிப்பார்க்கும் பார்வையற்றவர்களாக இல்லாமல், காதுகளின் அசைவு தரும் காற்றில் மிதக்கிறேன் என்றும், வாலில் வீச்சு உருவாக்கிய வலியில் துடிக்கிறேன் என்றும் உணரமுடியும்.

 

நேற்று நான் தோன்றிய காட்சியில்

என் சட்டை பட்டனை மாற்றிப்போட்டிருந்ததை

நான் கவனிக்கவே இல்லை

 

இன்று காலை நான் தோன்றிய காட்சியில்

என் காதோர தலைமுடி படியாமல் இருந்திருக்கிறது

 

கடந்த வாரம் இரண்டு மாறுபட்ட வண்ணமுள்ள

சாக்ஸ்களை அணிந்திருந்ததை

சிலர் உற்று நோக்கினார்கள்

 

கைக்கடிகாரத்தை இடது கரத்திற்குப் பதில்

வலதுகரத்தில் தவறுதலாக அணிந்த நாளில்

காலத்தை அது சரியாக காட்டியபோதும்

ஏன் என்னை விசித்திரமாகப்

பார்த்தார்கள் எனத் தெரியவில்லை

 

நன்கறிந்த ஒருவரை

வேறு பெயர்சொல்லி அழைக்கும் பிழைகள்

இப்போது அடிக்கடி நிகழ்கின்றன.

 

நான் இன்று செவ்வாய்க்கிழமை என்பதை மறந்து

ஞாயிற்றுக்கிழமைக்கான தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறேன்

 

நான் ஒவ்வொரு நாள் காலையிலும்

வழியெங்கும் உதிரும் மலர்

எந்த ஒழுங்கில் உதிர்வதென

எனக்குத் தெரியவில்லை

 

இன்னும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன

என் வாழ்க்கையை

ஒழுங்குபடுத்திக்கொள்ளவே விரும்புகிறேன்

இப்போது அல்ல

அடுத்த நூற்றாண்டில்

இரவுக்குக் கைகள் இல்லை எனத் தலைப்பிட்டுள்ள கையறுநிலைப்புத்தகத்தில் (பக்.102-103) உள்ள இந்த ஒருகவிதையை வாசிக்கும்போது தமிழ்ச் செவ்வியல் கவிதை மரபில் இருக்கும் பாரி மகளிரின் அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற கவிதை எழுப்பும் தொனியும், கணியன் பூங்குன்றனின் பெரியோரை வியத்தலும், சிறியோரை இகழ்தலும் தரக்கூடிய அர்த்தங்களும் நினைவில் வரும் வாய்ப்புண்டு. தொடர்ச்சியாகக் கவிதைகளை வாசிப்பவர்களுக்குக் ‘கையறுநிலையின் புத்தகம்’ என்ற குறிப்பு பயன்படாமல் போகலாம். ஆனால் மரபின் வழியாக வாசிப்புக்குள் நுழையும் கல்விப்புல மாணவர்களுக்கு இந்தக் குறிப்பு பெரிதும் பயன்படும் என்றே சொல்வேன். இதேபோல் ஒவ்வொரு தொகுப்பும் எந்தெந்த வகையில் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்தின் வழியாக எதிர்காலத்திற்கு நகர்கிறது என்பதைப் பேச நினைக்கும்போது கவியும் – கவிதைகளைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியரும் உதவி செய்வதில் பிழையொன்றும் நேரப்போவதில்லை.

தமிழ்க் கவிதைகளின் பதிப்பின் வரலாறே தொகைநூல்களின் கிளைகளால் நிரப்பியிருக்கும் தோப்புதான். எல்லா மொழியிலும் தொகைப்படுத்துதலின் பின்னணியில் பொதுநிலையிலான ஒரு காரணமும் சிறப்புநிலையிலான சில காரணங்களும் செயல்படுகின்றன. பொதுவான காரணமாக இருப்பது ஆவணப்படுத்துதல். குறிப்பிட்ட காலகட்டத்து எழுத்துகளைத் தொகுத்துப் பின்னர்வரும் சந்ததியினருக்குத் தரவேண்டும் என்னும் நோக்கத்தில் தொகை நூல்களைச் செய்திருக்கிறார்கள். அவற்றில் கிடைப்பனவெல்லாம் சேர்க்கப்படும் என்ற போக்கு இருக்கும். அதே நேரத்தில் அவ்வகைத் தொகைநூல்களுக்குள் சில நுட்பங்களும் செயல்பட்டிருக்கின்றன என்பதையும் தொகைநூல் வரலாறு நமக்குச் சொல்கிறது.

அகம், புறம் எனப் பாடுபொருள் அடிப்படையிலும் அதற்குள் அடையாளப்படும் உரிப்பொருள் அடிப்படையிலும் செய்யப்பட்ட தொகை நூல்களே தமிழ்ச் செவ்வியல் கவிதைகள். அடிவரையறைகளும் (ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு) கவிதை நுட்பங்களும் (அகநானூற்றின் களிற்று யானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை) நிலவியல் அடையாளங்களும் (குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி, பாலைக் கலி) உட்பிரிவுகளுக்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன. பெரும்பாலும் பத்து அல்லது நூறின் மடங்குகளின் (100, 150, 400, 500) அடிப்படையில் செவ்வியல் கவிதைகளும் அறநெறிக் கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பக்திக் கவிதைகளில் அவை ஆயிரங்களாகியிருக்கின்றன. பக்திக்கவிதைக்குள் சைவ பக்தி நாயன்மார்களின் தேவாரமாகவும் வைவணவபக்தி ஆழ்வார்கள் திவ்யப்பிரபந்தமாகவும் ஆகியிருக்கின்றன. சித்தர்களின் பாடல்களும் தனிப்பாடல் திரட்டுகளும் பெருந்தொகை நூல்களாகக் கிடைக்கின்றன. சிற்றிலக்கியங்கள் ஒவ்வொன்றும் பரணி, உலா, பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி என வகைமைசார்ந்த பிரிவுகள் என நீண்டுவந்து 18 ஆம் நூற்றாண்டுத் தனிப்பாடல் திரட்டு வரையிலும் பொருண்மை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுத் தொகைநூல்களாகவே கிடைக்கின்றன.

இந்த மரபின் தொடர்ச்சியை இக்கால இலக்கியத்தின் ஆரம்பக்காலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் முழுமையாக இல்லை. பொதுநிலைக்காரணங்கள் மட்டுமே தூக்கலாக இருக்கின்றன. சிறப்பான காரணங்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை. எழுத்துக் கவிதைகள் புதுக்குரல்களாகத் தொகுக்கப்பட்டதும் வானம்பாடிக் கவிதைகள் வெளிச்சங்கள் எனத் தொகுக்கப்பட்டதையும் அறிவோம். அத்தொகை நூல்களில் இருவேறு கவிதைப்போக்குகள் வாசிக்கக்கிடைக்கின்றனவே தவிர அவற்றுள் இடம்பெற்ற கவிகளின் தனித்தன்மை, உரிப்பொருள் தேர்வு, வெளிப்பாட்டுத் திறன் சார்ந்த குறிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. அதனை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றால், பதிப்பாசிரியர் அல்லது பதிப்புக்குழுவுக்குச் சில அடிப்படைக் கருத்தாக்கங்கள் வேண்டும். அதனை உள்வாங்கிப் பதிப்பாக்கியிருக்கவேண்டும். அப்படித் தரவேண்டுமென சி.சு.செல்லப்பாவும் ஞானியும் நினைக்கவில்லை.

19ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் தான் -பாரதி தொடங்கி ஒவ்வொருவரையும் வகைமை அடிப்படை அல்லது பொருண்மை அடிப்படை இல்லாமல் தனி ஆசிரியர் அடிப்படையில் நூலாக்கங்கள் நடந்தன. நவீனத்துவத்தின் அடிப்படையே – தனிமனிதனின் தன்னிலையை நிலைநிறுத்தல் என்னும் இயல்புதான். அதற்கேற்பவே ஆசிரியத் தொகுதிகள் அச்சாக்கம் பெற்றன. அவற்றிலும் பொருண்மைசார்ந்த வகைமைப் பிரிப்பு பதிப்பாசிரியர்களால் செய்யப்பட்டு வாசிக்கக் கிடைக்கின்றன. இந்தப் பகுதிக்குள் இந்த இந்த பொருண்மையிலான கவிதைகளை வாசிக்க நுழைகிறேன் என்ற திறப்பு கிடைப்பதால் அப்படியான தொகுப்புகளை வாசிப்பதில் பெரும் சிரமங்களை வாசகர்கள் எதிர்கொள்வதில்லை. பாரதி, பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், கண்ணதாசன் போன்றோரின் பெருந்தொகுப்புகளுக்குள் வாசிக்க நுழையும் ஒருவருக்குச் சில திறப்புகள் கிடைக்கும்.

புதுக்கவிதைத் தொகைநூல்களும் தனி ஆசிரியத்தொகுதிகளும் வகைப்படுத்தித் தருவதை நிராகரித்துவிட்டு, வாசகர்களைத் திணறடிக்கும் வேலையைச் செய்தன. “ எனது எழுத்துகளுக்குள்/ கவிதைகளுக்குள் என்ன இருக்கிறது?” என்று கண்டுபிடிப்பதுதான் உனக்கு நான் வைக்கும் தேர்வு அல்லது சவால் என்பதுபோல எந்தக் குறிப்பும் இல்லாமல் பதிப்பிக்கப்பட்டன. சில கவிதைகளுக்குத் தலைப்புகூட இருப்பதில்லை. அந்த நிலையில் வாசிக்க நினைப்பவர்கள் தடுமாறிப் பின் தங்கிவிடுவார்கள். சி.சு. செல்லப்பாவின் எழுத்து இதழிலிருந்து தொகுக்கப்பட்ட ‘புதுக்குரல்கள்’ தொகையையும் வானம்பாடி இதழிலிருந்து தொகுக்கப்பட்ட ‘வெளிச்சங்கள்’ தொகையையும் பட்டப் படிப்பிலும் முதுகலையிலும் மாணவனாகப் படித்தபோதும், பின்னர் ஆசிரியராகப் பாடம் சொல்லிய போதிலும் இதனை நானே உணர்ந்துள்ளேன். அப்போதெல்லாம் இந்தக் கவிதைகளுக்கும் செவ்வியல் கவிதைகளுக்குத் திணை, துறைக் குறிப்புகள் எழுதப்பட்டதுபோல எழுதப்பட்டிருக்கலாமே என்று தோன்றியதுண்டு. சில கவிஞர்களின் கவிதைகளுக்கு விமரிசனக் குறிப்புகள் எழுதியபோது குறிப்பிட்டதுமுண்டு. என்றாலும் புதுக்குரல்களின் வாரிசுகள் வாசிப்பவர்களுக்குச் சவால் விடுவதை நிறுத்தியதில்லை. புதுக்குரலில் இடம்பெற்றுள்ள கவிகளில் பலருக்கும் தமிழ் மரபுச் செயல்பாடுகள்மீது ஒவ்வாமையும் விலகலும் இருந்தன. தமிழின் தொன்மை, தமிழ் மரபு, தமிழ் இலக்கியவியல் போன்றவற்றை ஏற்காது, மேற்கத்திய இலக்கியவியலோடும் சமஸ்கிருதக் கவிதையியலோடும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பியவர்கள். வெளிச்சங்கள் தொகுதியில் தங்கள் கவிதைகளை இடம்பெறச் செய்த பலரும் தமிழ் இலக்கியக் கல்வியில் பயிற்சியுடையவர்கள் என்றபோதிலும் மரபைச் சுமையாக மட்டுமே கருதியவர்கள். அவர்களின் ஈடுபாடும் அடையாளங்களும் இடதுசாரி இலக்கியவியல் சார்ந்தே இருந்தன.

இதே நேரத்தில் ஈழத்துக் கவிதைகள் தொகைகளாக வரும்போது அந்த சிக்கல் எழவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். முதலில் க்ரியாவின் வழியாக வந்த பதினொரு ஈழத்துக்கவிஞர்கள் அறிமுக நிலையில் இருக்க, மரணத்துள் வாழ்வோம், வேற்றாகி நின்ற வெளி, சொல்லாத சேதிகள் போன்ற தொகுப்புகள் குறிப்பான பொருண்மைகளில் தொகுக்கப்பட்டு வாசிப்பவர்களுக்குத் திறப்புகளை உருவாக்கின. 35 ஆண்டுகாலப் போரின் உடன் விளைவான இடப்பெயர்வுகளும் புலம்பெயர்வுகளும் பல்வேறு வகையான தொகைநூல்களைத் தமிழ் நூல்பரப்பில் வாசிப்புவெளியிலும் விரித்து வைத்திருக்கின்றன.

இந்தப் புரிதல்களும் விருப்பங்களும் இல்லாமலேயே தமிழ்நாட்டுப் பதிப்பாளர்கள் பெருந்தொகை நூல்களை அவரவர் விருப்பப்படி அச்சிட்டு வெளியிடுகின்றனர். அவை சாக்கு மூட்டையில் கட்டியனுப்பப்படும் சரக்குகளாகவே இருக்கலாம். இல்லையென்றால் ட்ரங்குப் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்ட பத்திரங்கள் என்றும் சொல்லலாம்