உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்  பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டு தன்னைப் பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம் சாட்டினார் . பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்த நிலையில், எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த மாதம் உன்னாவ் பெண், சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உன்னாவ் பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயம் அடைந்தனர். அவரது இரு உறவினர்களும் உயிரிழந்தனர். உன்னாவ் பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.

உன்னாவ் பெண் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்நிலையில், அவரைச் சந்திக்கச் சென்ற உறவினர்களிடம் தங்கள் மீதான கொலை முயற்சி பற்றிக் கூறியுள்ளார் அவர்.

தன்னைக் கொலை செய்யும் நோக்கிலேயே லாரி தங்களது காரை நோக்கி நேராக வந்து மோதியதாகவும், காரை ஓட்டிய வழக்குரைஞர், தாக்குதலிலிருந்து தப்பிக்க முயற்சித்தபோதும் லாரி தங்களது கார் மீது மேலும் மேலும் மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சி.பி.ஐ விசாரணையிலும் தங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உன்னாவ் பெண்ணின் இந்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, உன்னாவ் பெண்ணுக்கு ஏற்பட்ட லாரி விபத்து குறித்த விசாரணையை முடிக்க சிபிஐக்கு கூடுதலாக 2 வாரங்கள் அவகாசம்  அளித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.